தமிழக 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (11/05/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் தொடங்குகிறது. இதில், தேர்தலில் வெற்றிபெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர். இவர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
முதலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டஅமைச்சர்களும், பின்னர் அகர வரிசைப்படி சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொள்கின்றனர். கரோனா பாதிப்பால் பங்கேற்க முடியாதவர்கள் வேறு ஒருநாளில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக்கொள்ள உள்ளனர். தேர்தலில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழைத் தவறாமல் கொண்டு வர சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு அப்பாவு, துணை சபாநாயகர் பதவிக்கு கு. பிச்சாண்டி ஆகியோர் திமுகசார்பில் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் இன்று மனுத்தாக்கல் செய்ய உள்ள நிலையில், நாளை (12/05/2021) காலை 10.00 மணிக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுகின்றனர்.