Skip to main content

"80 வயதானவர்கள் தபாலில் வாக்களிக்கலாம்"!- தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் பேட்டி...

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

tamilnadu assembly election 2021 election commission officers press meet

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகளுடன் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா, "மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்தோம். கரோனா தொற்று பரவாத வகையில் தேர்தல் நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம். கரோனா வழிகாட்டுதல்களுடன் சிறப்பான முறையில் பீகார் சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்களை நடத்தியுள்ளோம். ஊரகப் பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் அனைவரையும் வாக்களிக்கச் செய்வதே இலக்கு. 

 

tamilnadu assembly election 2021 election commission officers press meet

 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வாக்குச்சாவடி முகாம்களில் கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளங்கள் மருத்துவ வசதிகள், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி செய்து தரப்படும். விருப்பப்படும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

tamilnadu assembly election 2021 election commission officers press meet

 

அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று மரபுப்படி தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும். பணப்பட்டுவாடா, பரிசுப்பொருள் விநியோகம் போன்ற விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பவர்களைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

e12

மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பது பற்றி தற்போது எதுவும் கூற முடியாது. 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24- ஆம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, விவிபேட் இயந்திரம் தொடர்பான கையேடு, வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தை தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.