தமிழகத்தில் 7 கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "தமிழகத்தில் அரியலூர், கரூர், கோவை, விழுப்புரம், விருதுநகர், நாகை, ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களிலும் புதிதாக கலை & அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் மகளிர் கல்லூரியும் மற்ற 6 இடங்களில் இருபாலர் கல்லூரிகளும் தொடங்கப்படவுள்ளன. பி.ஏ. தமிழ், ஆங்கிலம் வழியில் பி.எஸ்சி கணிதம், கணினி அறிவியல், பி.காம் ஆகிய படிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த 7 கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்." இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.