![tamilisai soundararajan request women came into politics](http://image.nakkheeran.in/cdn/farfuture/N9OylMjh0ED5N1ZYIce51BStY0wsQiM-PoJqH4nQIN8/1682748626/sites/default/files/inline-images/tamilisai-art.jpg)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள சென்றான்பள்ளி கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று (28.04.2023) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில், ‘‘பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும். பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலம் அரசியல் தூய்மை அடையும். பெண்கள் அரசியலை தனக்கான துறை இல்லை என்று ஒதுங்கி இருக்கக் கூடாது. பெண்கள் அதிக அளவில் சவால்களைச் சந்திக்க மன தைரியமும் தன்னம்பிக்கையும் தேவை. ஆண்களை விட பெண்கள் தற்போதும் அதிக அளவில் சவால்களைச் சந்தித்து வருகிறார்கள். மாணவர்கள் கல்லூரிக்குள் இருந்து அரசியல் செய்தால் தான் பிரச்சனை. வெளியே சென்று அரசியல் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை" என்று பேசினார்.
பட்டமளிப்பு விழாவுக்கு பின்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்த செய்தியாளர்கள், தமிழக ஆளுநர் குறித்தும் ஆளுநர்கள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவது குறித்தும் கேள்வி எழுப்பிய போது, "தமிழக ஆளுநர் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அந்தந்த ஆளுநர்கள் மசோதாக்களில் கையெழுத்திடுவதில் அவர்கள் சட்டத்தை எப்படி கையாளுகின்றனர் என்பதை பொறுத்து காலதாமதமாகிறது" என்று தெரிவித்தார்.