Skip to main content

பா.ஜ.க.வை ஸ்டாலினால் தடுக்க முடியாது... குற்றாலத்தில் தமிழிசை

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
tamilisai soundararajan


நெல்லை மாவட்டத்தின் குற்றாலம் நகரில் பா.ஜ.கா.வின் நெல்லை மாவட்டத் தலைவர் குமரேச சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் அன்புராஜ் முன்னிலை வகிக்க, மேலப்பாவூர் சிவநாதன் தலைமையில் நடந்த தேவேந்திரகுலவேளாளர் இணையும் நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி வழியாக விமானத்தில் வந்தார் தமிழக பா.ஜ.க.வின் தலைவரான தமிழிசை சௌந்திர ராஜன்.
 

நிகழ்ச்சியில் பா.ஜ.க.வில் இணைந்தவர்களுக்கான உறுப்பினர் அட்டையை வழங்கிய தமிழிசை சௌந்திரராஜன் பின்னர் பேசுகையில்,
 

தமிழகத்தில் மாற்றம் தேவை. நல்ல தண்ணீர் உள்ளிட்ட மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களை பா.ஜ.க. தான் தந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க. வந்தால் நல்லது தான் நடக்கும் என மக்கள் நினைக்கிறார்கள். நம்பியாறு, கருமேனியாறு திட்டங்களை நிறைவேற்றியிருந்தால் தாமிரபரணி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்காது. தமிழகத்தில் காவிமயத்தைப் பார்த்து அனைவரும் பயப்படுகிறார்கள். அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் பதட்டத்துடன் காணப்படுகிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள் என்றாலே பா.ஜ.க. தான். பெண்களுக்கான நலத்திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
 

 

 

தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தர நாம் தீவிரமாகப் பாடுபடுவோம். தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் பா.ஜ.க. சார்பில் வாழ்த்து சொல்லப்பட்டது. இருந்த போதிலும் ஸ்டாலின்  இந்தியா முழுவதும் காவிமயமாவதைத் தடுப்போம் என்கிறார். ஸ்டாலின் நினைத்தாலும் பா.ஜ.க.வைத் தடுத்து விடமுடியாது. தமிழகத்தின் எல்லையைத் தாண்டினாலே அங்கீகாரம் இல்லாத நிலையில். தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.
 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானத்தில் வந்து கொண்டிருந்தார் தமிழிசை. அது சமயம் அதே விமானத்தில் அவரது இருக்கையின் பின்புறம் 3ம் என் இருக்கையில் அமர்ந்திருந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் அவரைப் பார்த்து முறைத்துக் கொண்டு கையை உயர்த்தி பா.ஜ.க.வுக்கு எதிராக கோஷம் போட்டுள்ளார். அவ்வாறு கோஷம் போட்ட பெண் தூத்துக்குடி 3வது மைல் பகுதியைச் சேர்ந்த கந்தன் காலனியிலுள்ள ஓய்வு பெற்ற அரசு டாக்டரான அந்தோணிசாமியின் மகள் லூயிஸ் சோபியா என்பதும், அவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்ப மேற்கொண்டு வருபவர் என்பதும் பின்னர் விமான நிலைய பாதுகாப்பு படையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
 

 

 

இதன் பின் விமானத்திலிருந்து இறங்கிய சோபியா நடைபாதையில் செல்லும் போதும் பா.ஜ.க.வை விமர்சித்து கோஷமிட்டுள்ளார். இதனால் தமிழிசையும் அவரை வரவேற்க வந்த பா.ஜ.க.வினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து விமான நிலைய வரவேற்பு அறையிலும், தமிழிசையும் சோபியாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் நித்யாவிடம், தமிழிசை புகார் செய்ய, பின் அந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் எம்.சி.பி. சட்டப்படி சோபியா கைது செய்யப்பட்டு தூத்துக்குடி ஜே.எம். 3வது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உடல்நிலைக் கோளாறு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சோபியா தரப்பில் உடனடியாக ஜாமீன் கோரப்பட்டுள்ளது.
 

tamilisai soundararajan

இதனிடையே தனது மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தமிழசை மற்றும் 10 பேர்கள் மீது புதுக்கோட்டை போலீசில் சோபியாவின் தந்தை புகார் கொடுத்திருக்கிறார்.
 

இது தொடர்பாக தமிழசை சௌந்திர ராஜன் சொல்லுவது, அந்தப் பயணி, விமானத்தில் வரும் போதே பிரதமர் மோடியையும், என்னையும் எதிர்த்து கையை உயர்த்தி கோஷமிட்டபடி வந்தார். அதற்கு நான் ஒன்றும் பேசவில்லை. தரையிறங்கி வரும் போது கூட அந்தப் பெண் எதிர் கோஷமிட்டபடியே வந்தார். அதை நான் கண்டித்தேன். எனக்கு பேச்சுரிமை இருக்கிறது என்றார். பேச்சுரிமை இருக்கலாம். ஆனால் எந்த இடத்தில் பேச வேண்டும் என்பது தெரிய வேண்டும். விமானத்திலேயே அந்தப் பெண் இப்படிக் கோஷம் போட்டது என்றால் அந்தப் பெண்ணின் பின்னணி பற்றி விசாரிக்க வேண்டும். நான் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
 

இது தொடர்பாக மேலும் விசாரிக்கையில் மாணவி சோபியா புதுக்கோட்டைப் பக்கம் உள்ள தட்டப்பாறையைச் சேர்ந்தவர் என்று அவர் கனடாவில் பி எஸ் சி பௌதீகம், கெமிஸ்ட்ரி பட்டம் படிப்பு முடித்த பின் ஆராய்ச்சியில் பிஎச்.டி. முடித்து அங்கு ஆய்வு சமர்ப்பித்து விட்டு நான்கு வருடங்களுக்குப் பின்பு தற்போது நாடு திரும்பியிருக்கிறார். சோபியா தமிழகச் செய்திகளை வெப்சைட்டுகள் மூலமாகத் தெரிந்து வைத்திருப்பவராம். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.