Skip to main content

''தமிழ் இனிமையான மொழி'' - ஆளுநர் உரையுடன் துவங்கியது சட்டப்பேரவை கூட்டம்!   

Published on 21/06/2021 | Edited on 21/06/2021

 

'' Tamil is a sweet language '' - The meeting of the legislators started with the speech of the Governor!

 

தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் கூடியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். ஐடி கார்டு பெற்ற கரோனா இல்லாத எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர். 

 

தற்போது சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவர் உரையாவது, ''தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள். அரசின் ஒவ்வொரு செயலும் சமூகநீதி, ஆண் - பெண் சமத்துவம். அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அரசின் ஒவ்வொரு செயலும் சட்டமும் திட்டமும் முயற்சியும் இந்த கொள்கைகளைக் கொண்டிருக்கும்.  தனக்கு வாக்களித்தோர் என்றும் வாக்களிக்காதோர் என்றும் எவ்வித பாரபட்சமும் இன்றி அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படும். தமிழை இந்திய அலுவல் மொழியாக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.  தமிழை ஒன்றிய அலுவல் மொழியாக பயன்படுத்த அரசியல் சட்டத்தில் 343வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப மத்திய அரசுடன் நல்லுறவு பேணுவோம். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது. கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்படும். 

 

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசுக்குத் தேவைப்படும் பல்வேறு கோரிக்கைகளைப் பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும். மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. தமிழ்நாட்டின் நிதி நிலையைக் குறித்து ஜூலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 335.01 கோடி ரூபாய் நிதி உதவி வந்துள்ளது.

 

மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களின் மீதான புகார்களை விசாரிக்கும் லோக்ஆயுக்தா அமைப்பிற்கு உரிய அதிகாரம் அளிக்கப்படும். ஊழல் தடுப்பு விழிப்புப் பணி ஆணையரகம் முடுக்கிவிடப்பட்டு நிலுவையில் உள்ள புகார்கள் விசாரிக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவை கொண்டுவந்து ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவோம். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்படும்.  நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரையைப் பெற்று சட்ட முன்வடிவுக்கான  நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும்.

 

உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லை வரைவு முறையாக இருப்பதை உறுதிசெய்த பின்னர் தேர்தல் நடத்தப்படும். கரோனா தீவிரம் குறைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும். பெரிய நகரங்களில் நெருக்கடியைக் குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும். கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.