Tamil News Department! A.P.R.O. Decided to fill the posts!

Advertisment

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் 30-க்கு மேற்பட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (ஏ.பி.ஆர்.ஓ.) பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வத்தின் கோஷ்டி பூசலால் இந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடப்பில் கிடந்தது.

இந்த நிலையில், தற்போது திமுக ஆட்சியில் அந்த பணியிடங்களை நிரப்பும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, திமுக மா.செ.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களின் வாரிசுகள் அல்லது உறவினர்களை இந்த பதவியில் அமர்த்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்கான மனுவும் அவரிடம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பணியிடம் தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்தி துறை தரப்பில் எதிரொலிக்கிறது.

Advertisment

2011 முதல் 2016 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், உதவி மக்கள் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டனர். இதற்காக, செய்தித் துறையில் பணியாற்றிய திமுகவினர், பல்வேறு அரசு துறைகளுக்கு மாற்று பணியில் அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.