Skip to main content

“மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு புதிய சாதனை படைக்கும்” - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நம்பிக்கை

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Tamil Nadu will set a new record in electronics exports says tRb raja

மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு 7.37 பில்லியன் டாலராக உயர்ந்து இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இது மேலும் மார்ச் மாதத்திற்குள் 9 பில்லியன் டாலராக உயர்ந்து புதிய சாதனை படைக்கும் எனத் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீட்டு மாநாடுகள், வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இதன் காரணமாக ஒரு தொழில் புரட்சியை நோக்கி தமிழ்நாடு அரசின் தொழில்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் தொழில் துறையில் உயர்ந்த தொழிற் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதால், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி விரைவுபடுத்தப்படுகிறது. மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில், இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக விளங்கிடும் தமிழ்நாடு தொடர்ச்சியாக இந்நிலையை உறுதிப்படுத்தி வருகின்றது.

மின்னணுவியல் ஏற்றுமதி தற்போது 7.37 பில்லியன் டாலரை அடைந்துள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியே 22.65 பில்லியன் டாலர் எனும்போது, தமிழ்நாட்டின் ஏற்றுமதி இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், கிட்டத்தட்ட 32.52 சதவிகிதம் ஆகும். முந்தைய நிதியாண்டில் (2022-2023) மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 5.37 பில்லியன் டாலர் ஆகும். இந்தத் தரவுகளை ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் அதாவது 2023-24 இல் 10 மாத காலகட்டத்திற்குள்ளாகவே 7.37 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு பொருட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் (2023-2024) இறுதிக்குள் மாநிலத்தின் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 9 பில்லியன் டாலர் எய்தி புதிய சாதனை படைக்கும்.

தமிழ்நாடு பல்வேறு துறைகளில் குறிப்பாக மின்னணு பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது என்றால் அதற்குப் பல காரணிகள் உள்ளது. தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், முனைப்பான ஆளுமை, கொள்கை சார்ந்த அணுகுமுறை, வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படும் நிர்வாகம், உற்பத்தி மற்றும் துல்லியப் பொறியியலில் சிறந்து விளங்குதல், உயர்தர தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டு இத்தகைய அபார வளர்ச்சியைத் தமிழ்நாடு கண்டுள்ளது.

Tamil Nadu will set a new record in electronics exports says tRb raja

இந்த அபரிமிதமான வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும் இத்துறையில் கொட்டிக் கிடக்கும் பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்திலும், அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது. தமிழ்நாடு குறை கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் கொள்கை 2024 வெளியிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் இத்துறையின் வளர்ச்சியை நன்கு துரிதப்படுத்தி 2 இலட்சம் திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதே, இந்தக் கொள்கையின் உயரிய நோக்கமாகும். பல்வேறு துறை சார்ந்த முதலீட்டாளர்களுடன் தொடர்ச்சியாக நல்லுறவுகள் மேற்கொண்டு வருவதன் மூலம், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வேகமாக குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறது. மிகச் சிறந்த மனித வளம், அனைத்துத் துறைகளும் மேம்படும் வகையில் அமைந்துள்ள சிறப்பான சூழலமைப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற வலுவான அம்சங்களைத் தமிழ்நாடு பெற்றுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சாதனையைப் பற்றி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசுகையில், “இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் தமிழ்நாடு அளித்து வரும் பெரும் பங்கினை இந்தச் சாதனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொலை நோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், உற்பத்திக்கான பிரதான முதலீட்டு மாநிலமாகவும் இளைஞர்களுக்கு உயர்தர வேலைகளை உருவாக்குவதற்கான மையமாகவும் தமிழ்நாடு பிரகாசமாகச் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்வது மட்டுமின்றி எங்களின் தொழில் வளர்ச்சிப் பாதையில் மேலும் மேலும் புதிய சாதனைகளை உருவாக்குவோம்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.