Skip to main content

கேரள நீர்வளத்துறை அமைச்சருக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் கடிதம்!

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

Tamil Nadu Water Resources Minister letter to Kerala Water Resources Minister!

 

கேரள நீர்வளத்துறை அமைச்சருக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (03/03/2022) கடிதம் எழுதியுள்ளார். 

 

அந்த கடிதத்தில், "தமிழகத்தின் வறட்சிக்கு இலக்காகும் மதுரை. திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடிநீர், நீர்பாசனம் போன்ற வாழ்வாதார தேவைகளை நிறைவு செய்ய முல்லைப் பெரியாறு அணை மிகவும் இன்றியமையாததாகும் என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் கிடைக்கப் பெற வேண்டும் என்பது அம்மாவட்டங்களின் விவசாயிகளுக்கு மிகவும் உணர்வு பூர்வமானதாக உள்ளது. இரு மாநில மக்களின் பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு, முல்லை பெரியாறு அணையை மிகுந்த கவனத்துடன் தமிழக அரசு பராமரித்து வருகிறது.

 

உச்சநீதிமன்றத்தின் 27/02/2006 மற்றும் 07/05/2014 நாளிட்ட ஆணைகளை நிறைவேற்றவும், மத்திய நீர்வளக் குழுமத்தின் வழிகாட்டுதலின்படியும், முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்குத் தேவைப்படும் பொருட்கள் மற்றும் இயந்திரங்களை அணைப் பகுதிக்கு கொண்டுச் செல்ல தேவையான அனுமதி வழங்குவதை கேரள அரசின் வனத்துறை மற்றும் நீர்வளத் துறை தாமதப்படுத்தி வருவதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

 

உச்சநீதிமன்ற ஆணையின்படி முல்லைப் பெரியாறு அணையின் எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு 15 மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என்பதால், கேரளா அரசின் அரசாணை நிலை எண் 23/2021. வனம் மற்றும் வன உயிரினத் துறை, நாள் 11/11/2021 மூலம் மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை ரத்து செய்து வெளியிட்ட ஆணைகளைத் திரும்பப் பெறவும், மேற்படி 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்களை இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

 

மத்திய நீர்வள குழுமத்தால் பரிந்துரைக்கப்பட்டவாறு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கத்தினை அளவிடும் கருவிகளை அமைக்க வேண்டும் என கேரள மாநில அரசு தொடர்ந்து கேட்டுவருவதை தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். ஐதராபாத்திலுள்ள புவி இயற்பியல் ஆய்வு நிறுவனம் மூலம் மேற்படி கருவிகளை அணைப் பகுதியில் அமைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் அக்கருவிகள் நிறுவுவதற்கு ஆயத்தமாக உள்ளன. இருந்தபோதிலும், நிலநடுக்கத்தினை அளவிடும் கருவிகளைப் பொருத்துவதற்கு தேவையான மேடை மற்றும் தூண்கள் அமைக்கப் பயன்படுத்தப்படவுள்ள கட்டுமான பொருட்களை அணைப் பகுதிக்கு கொண்டு செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதிக்கவில்லை என எனது அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

 

எனவே, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சனையில் தாங்கள் நேரடியாக தலையிட்டு, தேவையான கட்டுமான பொருட்களை வல்லக்கடவு வனச்சாலை வழியாக முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு கொண்டு செல்லவும், அவ்வனச்சாலையை சீரமைக்கவும்.15 மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும் தேவையான ஒப்புதலை வழங்கிட தொடர்புடைய தங்கள் மாநில அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

 

மேலும், உச்சநீதிமன்ற ஆணையை நாம் விரைந்து நிறைவேற்றும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு எழுதிய நேர்முக கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.