Skip to main content

ஐ.ஐ.டி.யில் தொடரும் சாதிய வன்முறை: தமிழ்நாடு அரசு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்... தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

சென்னை ஐஐடி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. சென்னை உள்ளிட்ட ஐ.ஐ.டி.களில் இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதில்லை. ஆராய்ச்சி, முனைவர் படிப்புகளில் இடஒதுக்கீடு அப்பட்டமாக மீறப்படுவதை ஆய்வுகள், ஆர்.டி.ஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.ஐ.டி.களுக்குள் சாதிய ஆதிக்கம் காரணமாக உயிரிழப்புகள் நிகழ்கின்றன. 

 

அண்மையில் சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் விபின், சாதிய அழுத்தத்தின் காரணமாக பணி விலகியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதவெறி காரணமாக கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்திப் உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு கேரள மாணவர் ஒருவர் பாதி எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில், ஐ.ஐ.டி.யில் தொடரும் அநீதிக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, ஐந்திணை மக்கள் கட்சி, திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து புதனன்று (ஜூலை 5) தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தின. 

 

இதன் ஒருபகுதியாக சென்னை ஐ.ஐ.டி. அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ், “வெளிநாடுகளில் படித்து ஐ.ஐ.டி.யில் பணிக்கு சேர்ந்தால்கூட ஆதிக்க சக்திகளோடு பணியாற்ற முடியாத நிலை உள்ளது. ஐ.ஐ.டி. வளாகத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் படிக்க முடியாத நிலை உள்ளது. 

 

அய்யர், அய்யங்கார் இன்ஸ்டிட்டியுட் என்று சொல்வதற்கே ஏற்ப ஐ.ஐ.டி. செயல்படுகிறது. ஐ.ஐ.டி. வளாகம் மர்ம கூடாரமாக உள்ளது. 2020இல் மட்டும் எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 902 இடங்களை, பொது இடங்களாக மாற்றியுள்ளனர். கடந்த 70 ஆண்டுகளாக பிராமண ஆதிக்கம், உழைக்கும் மக்களின் இடங்களைத் தொடர்ந்து பறித்துக்கொண்டிருக்கிறது. 

 

இவையெல்லாம் மத்திய அரசு நிறுவனத்தில் நடக்கிறது என மாநில அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. ஐ.ஐ.டி.யில் நடைபெறும் கொலை, இடஒதுக்கீடு மீறல் குறித்து பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.

 

ஐ.ஐ.டி.யில் நடைபெற்றுள்ள ஒவ்வொரு பதவி விலகல், மரணங்கள், இடஒதுக்கீடு மீறல்கள் குறித்து தமிழ்நாடு அரசு உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் போன்றவை என்ன செய்கின்றன? சென்னை உயர் நீதிமன்றம் தாமே முன்வந்து இவை குறித்து விசாரித்து நீதி வழங்க வேண்டும்” என அவர் கூறினார்.


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் கே. மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னணியின் நிர்வாகிகள் கே. சுவாமிநாதன், ஜானகிராமன், பி. சுந்தரம், முரளி, சந்துரு, திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் ந. அய்யப்பன், உமாபதி, அம்பேத்கர் மக்கள் சக்தி கட்சித் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து ஐஐடி பதிவாளர், டீன் ஆகியோரை சந்தித்து முன்னணியின் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Chennai IIT student incident information published in the investigation

 

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் குமார் ஜெயின் (வயது 31). இவர் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் பி.எச்.டி படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் வேளச்சேரியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்துள்ளார். இந்த சூழலில் சச்சின் குமார் ஜெயின், கடந்த மார்ச் 31 ஆம் தேதி காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றுள்ளார். ஆனால், கல்லூரியில் காலை வகுப்பு முடிந்ததும் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

 

இதனையடுத்து, சச்சின் குமார் ஜெயினுடன் தங்கியிருந்த மாணவர்கள் கல்லூரி முடித்து வீடு திரும்பினர். அப்போது சச்சின் குமார் ஜெயின் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு மரணித்த நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு பதறிய அவரது நண்பர்கள், உடனடியாக வேளச்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த வேளச்சேரி போலீஸார், சச்சின் குமார் ஜெயினின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை ஐஐடியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவு பேராசிரியர் ஆசிஷ்குமார் சென்னின் துன்புறுத்தல் காரணமாக சச்சின் குமார் ஜெயின்  தற்கொலை செய்து கொண்டதாக அவரது சகோதரர் புகார் அளித்திருந்தார். புகாருக்கு உள்ளான பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஐடி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தையடுத்து மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த தமிழக முன்னாள் போலீஸ் டிஜிபி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை சென்னை ஐஐடி அமைத்திருந்தது.

 

Chennai IIT student incident information published in the investigation
பேராசிரியர் ஆசிஷ்குமார் சென்

 

இந்த குழுவின் விசாரணையின் முடிவில் மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலைக்கு பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் துன்புறுத்தலே காரணம் என ஐவர் குழு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த குழு பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

 

ஐவர் குழு மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட மாணவர் சச்சின் குமார் ஜெயின் மட்டுமின்றி மேலும் பல மாணவர்கள் துன்புறுத்தப்பட்டனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த பிப்ரவரி கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மட்டும் 4 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

74 நாட்களில் 4வது மரணம்; ஐஐடியில் தொடரும் அவலம்!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

madars iit students passed away

 

சென்னை ஐஐடியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மஹாராட்ஷ்ரா மாநிலத்தைச் சேர்ந்த கேத்தார் சவுக்லே(20) என்ற மாணவர் நேற்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீசார், மாணவர் கேத்தார் சவுக்லே உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தரப்பில் இருந்து தெரிவித்துள்ளனர். 

 

சென்னை ஐஐடியில் மாணவர்கள் உயிரிழக்கும் சோகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 74 நாட்களில் மட்டும் மூன்று இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி படிக்க வரும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டு உயிரிழப்பதை தடுக்க நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.