Tamil Nadu State Conference Condemns Arrest of Fishermen cm participates

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டித்து இராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார் என மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டைச் சேர்ந்த இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கைக் கடற்படையினரால் இன்று (25.7.2023) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்துதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் தொடர்ந்து கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும்உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார். இருந்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாகக் கடந்த 20 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதுகுறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும் இலங்கை அதிபரை வலியுறுத்திடக் கேட்டுக்கொண்டார். மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைத்தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம் பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Advertisment

மேலும், மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தொடர்பாகத்தமிழ்நாட்டின் அனைத்து மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளைக் கண்டித்தும், அதனைத்தடுத்திடக் கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இராமநாதபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என்று மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்து இருந்தனர். அவர்களின் அழைப்பினை ஏற்றுத்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.