சென்னையில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக போலீசார் மறுப்பதால் இடமாற்றம் செய்ய ஆலோசிப்பதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை - கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியானது கடும் போராட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்டது.
அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் என சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், நேற்றைய போட்டியின் போது வீரர்களை அழைத்து வருவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சிரமங்கள் ஏற்பட்டன. போட்டியின் போது மைதானத்தின் உள்ளே காலணி வீச்சு சம்பவமும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது. இதைதெடர்ந்து சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் இடம் மாற்றப்படுவதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், பாதுகாப்பு தர தமிழக போலீஸ் மறுப்பதால் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து மாற்றப்படுகின்றன. புனே உள்ளிட்ட பல இடங்களில் போட்டிகளை நடத்த பரிசீலித்து வருகிறோம். போட்டிகள் நடத்தப்படவுள்ள இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments