Tamil Nadu medicine Control Department warns

சிதம்பரம், மேலவீதியில் கடலூர் மாவட்ட குடும்ப நலச் செயலகம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை இணைந்து சிதம்பரம் சரக மருந்து சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கான கருத்தடை மாத்திரை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் எம்.என்.ஸ்ரீதர் ஆலோசனையின் பேரில் நடைபெற்றது.

சிதம்பரம் சரக மருந்து வணிகர்கள் சங்க தலைவர் வெங்கடசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் ஹரியன் ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை மற்றும் பதிவேடு பராமரிப்பு செய்வது பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கருக்கலைப்பு மாத்திரையால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், தவிர்க்க முடியாத நிலையில் அதனைச் சரியான முறையில் சேதனை செய்து வழங்க வேண்டும் என்றும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் மருந்தகத்தில் விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார். மேலும், அதனால் சமூகத்தில் ஏற்படும் இறப்புகள் பற்றியும் எடுத்துக்கூறினார்.

மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சுகுமார், சிதம்பரம் சரக மருந்துகள் ஆய்வாளர் நாராயணன் ஆகியோர் கருக்கலைப்பு மாத்திரைகளை மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் விற்பனையின் போது பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் பற்றியும் எந்த சூழ்நிலையிலும் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தினர்.

Advertisment

இந்த நிகழ்வில் கருக்கலைப்பு மாத்திரை பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு பிரசுரம் வெளியிடப்பட்டது. இதில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் இருந்து நிர்வாகிகள். 100- மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்ட மொத்த மருந்து பிரிவு தலைவர் பிரகாஷ் நன்றி தெரிவித்தார்.