தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக ஹர்ஷ்வர்தன் இருந்தபோதே அவரை சந்திக்க தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முயற்சி மேற்கொண்ட நிலையில், தற்போது மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு புதிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மன்சுக் மாண்டவியாவை இன்று (15.07.2021) தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை உடனே துவங்க வேண்டும்; கோவையிலும் எய்ம்ஸ் தொடங்க வேண்டும்; தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும்; 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்; தமிழ்நாட்டிற்கு நீட்டிலிருந்து விலக்கு; செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை திறக்க வேண்டும்; கரோனா 3ஆம் அலையைத் தடுக்க தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எனவே மத்திய அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்த முழுவிவரம் பின்னரே தெரியவரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.