Skip to main content

மனம் திருந்திய மாவோயிஸ்ட்டுக்கு மறுவாழ்வு கொடுத்த தமிழக அரசு 

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

Tamil Nadu government rehabilitated Maoist

 

மாவோயிஸ்ட் இயக்கமானது, கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய அரசால் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது. அந்த சமயத்தில், மாவோயிஸ்ட் இயக்கத்தின் மாநில குழு உறுப்பினராக இருந்தவர்தான், கர்நாடக மாநிலம் ஷிவமோகா நகரை சேர்ந்த சந்தியா என்கிற பிரபா. இவரது கணவர் பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி, மாவோயிஸ்ட்டுகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்தார்.

 

வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்ட் அமைப்புகள், கூண்டோடு ஒடுக்கி வந்த நேரத்தில் தென் மாநிலங்களை குறிவைத்து  மாவோயிஸ்ட்டுகள் களமிறங்கினர். அப்போது சந்தியாவும், பி ஜி கிருஷ்ணமூர்த்தியும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் மாவோயிஸ்ட் இயக்கத்துக்காக பல்வேறு தலைமறைவு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனால், கர்நாடக, கேரள மாநிலங்களில்  கிருஷ்ணமூர்த்தி மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகளும், சந்தியா மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. மேலும், இவர்களின் தலைக்கு விலை வைத்து, தேடப்படும் மாவோயிஸ்ட் என அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், கிருஷ்ணமூர்த்தியை, கேரள போலீசார் கைது செய்தனர். அப்போது, போலீசில் சிக்காமல் இருந்த சந்தியா, தன்னை சுட்டுக்கொன்று விடுவார்கள் என பயந்து அடுத்த ஒரு சில நாட்களில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் முன்னிலையில் தமிழக போலீசாரிடம் சரணடைந்தார். பின்னர், மனம் திருந்தி வாழ வேண்டும் என கருதிய சந்தியாவை வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்தனர். மேலும், பக்கவாதம் மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சந்தியாவுக்கு தொடர் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

 

Tamil Nadu government rehabilitated Maoist

 

இதையடுத்து, சந்தியா மனம் திருந்தியதால், அவரின் மறுவாழ்விற்காக தமிழக அரசு வேலூர் மாவட்டம் அரியூர்  பகுதியில் ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க முடிவு செய்தது. அதற்கான பணிகளை விரைந்து செய்தனர். ஆவின் பூத் தயாரானதும் கடந்த நவம்பர் 19 ஆம் தேதியன்று, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். 

 

அப்போது ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசும்போது, "கடந்தாண்டு சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சந்தியாவுக்கு, தமிழக அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஆவின் பாலகம் அமைத்து தரப்பட்டுள்ளது. அவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக கியூ பிரிவு  எஸ்.பி. கண்ணம்மாள்,  திருப்பத்தூர் எஸ்.பி. பாலகிருஷ்ணன், உள்ளிட்ட  அரசு உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“நடப்பாண்டும் தமிழ் கட்டாயப் பாடம் இல்லை; அரசின் அலட்சியமே காரணம்” - ராமதாஸ் கண்டனம்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Ramadas has condemned the negligence of the Tamil Nadu government as the reason

“உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, அடுத்த ஆண்டு முதல் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 26ஆம் நாள் தொடங்கவிருக்கும் நிலையில்,  நடப்பாண்டிலும் தமிழ் கட்டாயப்பாடம் இல்லை; மொழிச்சிறுபான்மையினர் நடப்பாண்டில் அவர்களின் தாய்மொழிப் பாடத்தில் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், இன்னும் அந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணமாகும்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக பிறப்பித்திருக்கும் அரசாணையில், ‘‘சில  மொழிச்சிறுபான்மை பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படாததால், நடப்பாண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ் மொழிப் பாடத் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது; மொழி சிறுபான்மையினர் பள்ளிகளில் உள்ள அனைத்து தமிழாசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் நிலையில் சிறுபான்மை மொழி பயிலும் மாணவர்களுக்கு 2025&இ-ல் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி பாடத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கோரமாட்டோம் என்று அந்தப்பள்ளிகள் உறுதி அளித்துள்ளன’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காமல் பட்டப்படிப்பைக் கூட நிறைவு செய்ய முடியும் என்ற நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே, பா.ம.க. கொடுத்த அழுத்தத்தின் பயனாக மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 09.06.2006-ஆம் நாள் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

2006 ஆ-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஓவ்வொரு வகுப்புக்கு நீட்டிக்கப் பட்டு பத்தாவது ஆண்டில் தான் பத்தாம் வகுப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்புக்கு தமிழ்ப் பாடம் நீட்டிக்கப்படும் போது அந்த வகுப்பில் தமிழ் கற்பிக்கப்பட்டதற்கான சான்றிதழை பள்ளிகளின் நிர்வாகங்கள் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அது கட்டாயமாகும்.

அதன்படி முந்தைய 9 ஆண்டுகளும் தங்களது பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தைக் கற்றுக் கொடுத்ததாக அரசிடம் சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளிகள், பத்தாவது ஆண்டில் மட்டும் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடத்தை கற்பிக்க முடியவில்லை என்று கூறி விலக்கு கோரின. முந்தைய 9 ஆண்டுகளில் தமிழைக் கற்பிக்க ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டமைப்புகள் பத்தாம் ஆண்டில் மட்டும் மாயமானது எப்படி? என்ற வினாவை அரசு எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், அந்த வினாவை தமிழக அரசு எழுப்பத் தவறிவிட்டது.

இப்போதும் கூட தமிழ் கட்டாயப் பாட சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகியும் தமிழாசிரியர்களை நியமிக்காதது ஏன்? என்று அந்த பள்ளி நிர்வாகங்களிடம் தமிழக அரசு வினா எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், எந்த வினாவும் எழுப்பாமல், தமிழ் பாடத் தேர்வை எழுதுவதிலிருந்து மேலும் ஓராண்டுக்கு தமிழக அரசு விலக்கு அளித்திருக்கிறது. தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதில் அரசு காட்டும் ஆர்வம் இவ்வளவு தான்.

இன்னொரு பக்கம் தமிழ் கட்டாயப்பாடம் தொடர்பாக சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக 2015-&16ம் ஆண்டில் மொழிச்சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  8 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 முதல் செயல்படுத்த ஆணையிட்டது. ஆனாலும், அதை மதிக்காத பள்ளிகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றன. கடைசி நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததால் கடந்த ஆண்டு மட்டும் தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலையில் நீதிமன்றம் திறக்கப்பட்ட பின்னர் இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பளிப்பதாக அறிவித்தது.

ஆனால், ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும் கடந்த திசம்பர் மாதம் ஓய்வு பெற்றும் சென்று விட்டார். அதன் விளைவு தான் நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி இந்த வழக்கு  எப்போது விசாரணைக்கு வரும்? தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டம் எப்போது முதல் நடைமுறைக்கு வரும்? என்பதும் தெரியவில்லை. அன்னைத் தமிழ் அரியணை ஏற இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆகுமோ?

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டில் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டம் கொண்டு வருவதற்கு விடுதலைக்குப் பிறகு 60 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அந்தச் சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகியும் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது உண்மையாகவே தமிழர்கள் தலைகுனிய வேண்டிய ஒன்றாகும். இந்த அவலநிலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, அடுத்த ஆண்டு முதல் தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.