தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாயிரத்திற்கும் கீழாக பதிவாகி வந்த தினசரி கரோனா பாதிப்பு, தற்போது இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவலின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.
தமிழகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் என தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து சுகாதாரப்பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மருத்துவக் கல்லூரி வளாகங்களில் அதிகப்படியான கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.