D

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் கடந்த 58 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில், கடந்த 4-ந்தேதி, 58வது நாள் போராட்டத்தில்தமிழக அரசு, "மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசூலிக்கப்படும்" என அரசாணை வெளியிட்டது.

Advertisment

இந்த நிலையில், அரசாணை வெளியிட்டுள்ளதையொட்டி தமிழக அரசின் சுகாதாரத் துறை கல்வி இயக்குனர் நாராயணபாபு மற்றும் 15 பேர் கொண்ட குழுவினர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வுசெய்து வருகிறார்கள். இவர்கள் இன்னும் மூன்று நாட்கள் இங்கேயே தங்கி மருத்துவக் கல்லூரியை முழுவதுமாக அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளைச் சந்தித்து சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் மருத்துவமனையில் பணியாற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் மருத்துவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளார். அப்போது, பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.