Tamil Nadu Government Employees Association Struggle

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தர்ணா போராட்டம் மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த தர்ணா போராட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் பெரியசாமி கலந்துகொண்டு கண்டன விளக்க உரையாற்றினார்.

Advertisment

இதையடுத்து செய்தியாளர்களை பேசிய அவர், “இந்த தர்ணா போராட்டத்தில் கோரிக்கைகளாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒய்வு ஊதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை கலைத்து, தேசிய ஓய்வூதியத்தின் கீழ் உள்ள அனைத்து சந்தாதாரர்களையும் வரையறுக்கப்பட்ட பயனளிப்பு ஓய்வூதிய முறையின் கீழ் கொண்டுவர வேண்டும். அகவிலைப்படி ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட கரோனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி எம்ஆர்பி செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாநில அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Advertisment

மேலும் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், தமிழக முதல்வரை ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணியாக சென்று கோரிக்கைகள் குறித்து முறையிடுவது போவதாகவும் தெரிவித்தார்.