Skip to main content

பஞ்சப்படி, ஈட்டிய விடுப்பு ரத்து செய்யும் தமிழக அரசு! தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் கண்டனம்!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

 Tamil Nadu government cancels leave -  Secondary School Headmasters Association condemns

 

பஞ்சப்படி, ஈட்டிய விடுப்பு ரத்து செய்யும் தமிழக அரசின் செயலுக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. 


இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசானது கரோனோ வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக நிதி நிலையை காரணம்காட்டி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை (சுமார் 18 மாதம்) அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படாது என்றும், ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படாது என்றும், வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 7.9 லிருந்து 7. 1 ஆக குறைத்து அரசாணை பிறப்பித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக அரசானது  கரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கையில் உள்ளபோது, எமது அமைப்பு முதன் முதலில் ஒரு நாள் ஊதியத்தை அரசுக்கு வழங்குவது என முடிவு செய்து, அந்த நிதியை ஜாக்டோ - ஜியோ பேரமைப்புடன் இணைந்து ரூ 150 கோடியினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நிவாரண நிதிக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே வேளையில் பல்வேறு கடன் சுமைகளை சுமந்து கொண்டு கரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கையில் உயிரை பணையம் வைத்து இன்று வரை அரசுக்கு நற்பெயரை ஈட்டி, பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இன்று வரை களத்தில் நின்று, என்றும் பணியாற்றி வருபவர்கள் எமது ஊழியர்களே. 

மேலும் ஓர் அரசு என்பது ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் உள்ளடக்கிய ஒரு பகுதி. ஆனால் தமிழக அரசானது எங்களை மாற்றாந்தாய் பிள்ளைகளை போல் கருதி பல்வேறு ஒடுக்கு முறை நடவடிக்கைகளை செய்து வருவது, "இளகின இரும்பை கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான் என்பது போலவும், "கடைந்த மோரிலே, குடைந்து வெண்ணெய் எடுப்பது போலவும்" தொடர்ந்து தாக்குதலை அரசு தொடுத்து வருகிறது. இச்செயல் எதிர்காலத்தில் நல்ல சூழ்நிலையை உருவாக்காது என்று எமது அமைப்பு கருதுகிறது. 

மேலும் தொழிற் சங்க போராட்ட வரலாற்றில் அதிகார வர்க்கமும், சர்வாதிகார போக்கும் வென்றதாக வரலாறு இல்லை என்பதையும் எமது அமைப்பு சுட்டிக் காட்டுகிறது. அதே வேளையில், பேரிடர் காலங்களில் அரசுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசிடமிருந்து மாநில அரசு கூடுதல் அழுத்தத்தை கொடுத்து பேரிடர் காலத்திற்கு வழங்க வேண்டிய கூடுதல் நிதியை பெறுவதற்கு உரிய நடவடிக்கையை மேற்க்கொள்ள வேண்டும். 

மேலும், மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி பாக்கி பங்கு தொகையை முழுமையாக பெற்று இத்தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு போர்க்கால அடிப்படையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும், கடந்த காலத்தில் சட்ட மன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட அனைத்து படிகளையும் உயர்த்தி வழங்க தமிழக அரசானது நிதி ஒதுக்கியுள்ளதை ரத்து செய்து. அவர்களின் ஊதியத்தை பழைய நிலையிலேயே தொடர செய்து, இக்கூடுதல் நிதியை போர்க்கால அடிப்படையில் இத்தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த வேண்டும். 

மேலும் பெரும் பணக்காரர்களிடம் குவிந்துள்ள செல்வத்தில் பேரிடர் நிதிக்காக 5 சதவீதத்தை வசூலிப்பது மட்டுமல்லாமல், இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, இதிலிருந்து வரும் நிதியை இத்திட்டத்திற்கு பயன்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மேலும், தமிழக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்சப்படி , ஈட்டிய விடுப்பு ஊதிய தொகையானது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருமான வரி கணக்கு மற்றும் சந்தையில் வாங்கப்படும் பொருட்கள் மூலம் அரசுக்கு சுழற்சி முறையில் பற்று வைக்கப்பட்டு, மீண்டும் சந்தையில் பொருளாக மாற்றப்படும். இதனால் அரசுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்கு தீர்வாகாது மாறாக கூடுதல் நிதி நெருக்கடியை  ஏற்படுத்தும் என்பதே உண்மையான பொருளாதார கூற்று என்பதை புரிந்து கொண்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ஊதியம், மற்றும் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு அரசாணைகளை ரத்து செய்து மீண்டும் பறிக்கப்பட்ட உரிமைகளை பெற்று வழங்கிட தமிழக அரசானது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநிலக் கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.


                     

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

5 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச படம் காட்டிய தலைமை ஆசிரியர்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
headmaster arrested under POCSO Act in Coimbatore

கோவையில் ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் ஆபாசப் படங்களைக் காட்டிய தலைமை ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவன் புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிராங்க்ளின் (44). இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம்  அப்பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரிடமும் தனது  செல்போனில் ஆபாச வீடியோவை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இது குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.  அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் பிராங்க்ளின் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதனிடையே பிராங்க்ளினை தலைமை ஆசிரியர் பதிலிருந்து பணியிடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.