Skip to main content

“தமிழக வெள்ள பாதிப்புக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும்” - பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Tamil Nadu Chief Minister's request to the Prime Minister Relief should be provided immediately to the Tamil Nadu flood victims

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ.1112 கோடியில் உருவாக்கப்பட்டது. இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்களைத் தொடங்கி வைத்தல், மற்றும் அடிக்கல் நாட்டுவிழா இன்று மதியம் விமான நிலைய வளாகத்தில் நடந்தது. 

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய முனையத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக அவருக்கு முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் முருகன் வரவேற்று பேசினார். முன்னதாக பிரதமர் மோடிக்கு, விமான முனையத்தின் சிறப்புகளை விமான மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விளக்கி கூறினார். மேலும், புதிய முனையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்தும் வசதி, உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறித்தும் ஜோதிராதித்யா விழாவில் பேசினார். சாமானியர்களும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு என்றும் அவர் கூறினார்.

இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, “இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. தொட்ட துறைகள் அனைத்திலும் தமிழ்நாடு சிகரத்தை தொட்டு வருகிறது. விமான நிலையங்களை விரிவாக்கம், மற்றும் நவீனபடுத்த தமிழ்நாடு அரசு நிலம் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விமான நிலையத்தை விரைவில் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

தென் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் ஆன்மீக பயணமாக வருகிறார்கள். அதே போன்று வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாவிற்காகவும் அங்கு வருகிறார்கள். அவர்கள் ஏதுவாக வரவேண்டும் என்பதற்காக மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் வைத்த கோரிக்கை பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டும். 

சென்னை- பினாங்கு, சென்னை- டோக்கியோ நகரங்களுக்கு நேரடி விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும். சமீபத்தில் தென் மாவட்டங்களில் வெள்ளம், அதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை பிரதமர் மோடி அறிந்தது தான். அந்த வெள்ளத்தால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனை இயற்கை பேரிடராக கருதி , தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு தான் இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பிரதமர் உதவுவார் என நம்புகிறேன். இது அரசியல் முழக்கம் அல்ல. தமிழகத்தின் கோரிக்கை மக்களுக்கானது” என்று பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.