தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18,19 ஆகிய தேதிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் கூடிய சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ''திமுக ஆட்சிக்காலத்தில் சுமார் 25,000 மக்கள் நலப்பணியாளர்கள் கலைஞரால் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில் அவர்கள் நீக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டு ஒட்டுமொத்த மதிப்பூதியமாக மாதந்தோறும் 7,500 ரூபாய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 நாள் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பணியில் மக்கள் நலப்பணியாளர்கள் அமர்த்தப்படுவர்'' என்றார்.