Skip to main content

இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கு ரத்து... தமிழக முதல்வர் அறிவிப்பு!

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

LOCKDOWN

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறிப்பிட்ட அளவில் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. ஞாயிறு பொதுமுடக்கம், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை,  இரவு நேர ஊரடங்கு, கோயில்களை விடுமுறை நாட்களில் மூடுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வந்தது.

 

இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகின்ற 31ம் தேதியோடு நிறைவடைய இருக்கிற நிலையில் கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா? அல்லது தளர்வுகள் அளிப்பதா? என்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 30ஆம் தேதி முழு முடக்கம் ரத்து செய்யப்படுகிறது. நாளை முதல் (ஜன.28 ஆம் தேதி) இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளும் நேரடியாக நடத்தப்படும்.

 

அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செயல்படும். சமுதாய நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள், பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்குத் தடை தொடரும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு முறைகள் பின்பற்றப்பட வேண்டும். மழலையர் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை. அரசு மற்றும் தனியார் அமைப்புகளால் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. உணவு விடுதிகள், அடுமனைகள் உள்ளிட்ட இடங்களில் 50% வாடிக்கையாளர்களே உணவு அருந்த வேண்டும். திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 நபர்கள் பங்கேற்க வேண்டும். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படலாம். துணிக்கடைகள் மற்றும் நகைக் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி. அழகு நிலையம், சலூன், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.