Tamil Nadu Budget Date Announcement; Speaker press conference

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அந்த நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் 20 ஆம் தேதி தாக்கல் செய்ய இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Advertisment

முன்னதாக அரசுத்தரப்பிலிருந்து அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம் பெற இருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. வேளாண்மை தொடர்பாக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரு நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்ட பின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும். குறிப்பாக மகளிருக்கான உரிமைத் தொகை ரூ.1000 ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்துஇந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். மேலும், அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் குறித்து சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட், மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். மேலும், வேளாண் நிதிநிலை அறிக்கை எப்பொழுது தாக்கல் செய்வார்கள் என்பன குறித்தும் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். மார்ச் 28 ஆம் தேதி முன்பண மானியக் கோரிக்கையும் கடந்த ஆண்டுக்கான கூடுதல் செலவின மானியக் கோரிக்கையும் தாக்கல் செய்வார்கள். இதனைத் தவிர அனைத்து முடிவுகளும் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்.”எனக் கூறியுள்ளார்.