Skip to main content

“சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கீடு” - செல்வப்பெருந்தகை

Published on 24/06/2025 | Edited on 24/06/2025

 

Tamil language allocated 22 times less funds than Sanskrit Selvaperunthagai

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக இந்திய மொழிக்களுக்கான வளர்ச்சி நிதியில் சமஸ்கிருத மொழிக்கு இதுவரை ரூ.2,533 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அதேசமயம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா உள்ளிட்ட 5 மொழிகளின் வளர்ச்சிக்கு ரூ.147.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்குச் சமஸ்கிருத மொழிக்கு ரூ.230 கோடியும், மற்ற மொழிகளுக்கு ரூ.13 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தற்போது இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், “சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு 2014-15 முதல் 2024-25 வரை ரூ.2,533 கோடியும், (ஆண்டுக்கு ரூ.230 கோடி) தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற 5 செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.

இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதத்தை ஆக்குவோம் என்பதுதான் ஜனசங்கத்தின் கொள்கை. இது அவர்களது 1952 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்-யின் கொள்கைகளுக்காக, பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்காக மக்கள் வரிப்பணத்தை ஏன் செலவிட வேண்டும்?

சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதம்தான் இந்தியாவின் முக்கியமான மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன். செம்மொழி தகுதி பெற்ற அனைத்து மொழிகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்