Skip to main content

தமிழ் படைப்பாளிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை: கி.ரா விழாவில் எழுத்தாளர்கள் ஆவேசம்

Published on 22/09/2017 | Edited on 22/09/2017
தமிழ் படைப்பாளிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை: கி.ரா விழாவில் எழுத்தாளர்கள் ஆவேசம்



கரிசல் காட்டு எழுத்தாளர் என போற்றப்படும் எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் 95-ஆவது பிறந்தநாள் விழா கடந்த 18-ஆம் தேதி புதுச்சேரி பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராவின் பேத்தியின் திருமண வரவேற்பும் நடந்தது.

கருத்தரங்கம், வாகை முற்றம், நிலாச்சோறு, வாழ்த்தரங்கம் என பல பிரிவுகளாக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்கத்தில் இளவேனில் இயக்கிய ‘முன்னத்தி ஏர்’, இடைச்செவல், ஆகிய கதைகள் ஆவணப்படங்களாக திரையிடப்பட்டன. வாகை முற்றத்தில் கி.ராவுடன் வாசகர்கள் கலந்துரையாடினர். சிறந்த சிற்றிதழ்க்கான கரிசல் விருது தளம் காலாண்டிதழ்க்கும், எழுத்தாளர்க்கான கரிசல் விருது ரமேஷ் பிரேதனுக்கும் வழங்கப்பட்டது. சிலம்பு நா.செல்வராசு எழுதிய ‘பேராசிரியர் கி.ரா’ நூலை கி.ரா வெளியிட, அவரது துணைவியார் கணவதி அம்மா பெற்றுக்கொண்டார். கி.ரா.பிரபி எழுதிய ‘கரிசல் மனிதர்கள்’ நூலை எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் வெளியிட கவிஞர் கலாப்பிரியா பெற்றுக் கொண்டார்.

‘கி.ரா மண்ணும் இசையும்’ எனும் தலைப்பில் கதைக்குரல், குரலிசை, விரலிசை நிகழ்ச்சி புது வித அனுபவமாக இருந்தது. கதை சொல்லு கதை சொல்லு கிராவின் கதை சொல்லு எனும் தலைப்பில் எழுத்தாளர் பவா.செல்லத்துரை கருத்துரையாற்றினார். நிலாச்சோறு நிகழ்வில் கிராவின் மாணவர்கள் கிராவின் படைப்புகள் குறித்து கலந்துரையாடினர். மாலையில் சென்னை பெர்ச் கலைக்குழுவின் கிரா குழம்பு நாடகம் நடைபெற்றது.   

இறுதியாக வாழ்த்தரங்கம் நடைபெற்றது. துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,  நடிகர் கமலஹாசன் உள்பட பலர்  வாழ்த்து செய்திகளை அனுப்பியிருந்தனர். அதைத்தொடர்ந்து ‘கி.ரா கடிதங்கள்’, ‘பிஞ்சுகள்’, ‘கி.ரா-95 முடிவில்லா பயணம்’ ஆகிய மூன்று நூல்களை நீதிபதி மகாதேவன் வெளியிட  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பெற்றுக்கொண்டார். 

வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் வரவேற்புரையில், "கிராமத்திலிருந்து இலக்கியம் படைத்தவர்கள் பலர். கி.ரா இடைச்செவல் கிராமத்திலிருந்து இலக்கியத்தின் உச்சத்தை சென்றடைந்தார். சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. ஞானபீட விருது கிடைக்கும் என எதிர்பார்த்தோம். தமிழில் ஜெயகாந்தனுக்கு பிறகு யாருக்கும் தரவில்லை. தமிழகம் எல்லாவற்றிலும் புறக்கணிக்கப்படுவது போல இலக்கியத்திலும் புறக்கணிப்படுகிறது" என்றார்.

தலைமையுரையாற்றிய பழநெடுமாறன், " மக்கள் சாதாரணமாக பேசும் சொல், வழக்கு, கதைகள் ஆகியவை வாய்மொழி இலக்கியமாக, நாட்டுப்புற இலக்கியமாக மலர்ந்துள்ளது. அந்த வகையில் நமது தாய்மொழி தமிழில் முன்பு தோன்றியது மக்கள் இலக்கியம். எழுத்து பிறந்து இலக்கியம் பிறக்கிறது. எழுத்தில் இல்லாத வகையில் நாட்டுப்புற மக்கள் மத்தியில் பேச்சு வழக்கில் இருந்ததை அரும்பாடுபட்டு தொகுத்துள்ளார் கிரா. தனி ஒருவராக இச்சாதனை படைத்துள்ளார். பெர்னாட்ஷா நோபல் பரிசு பெற்ற இலக்கிய ஆசான். லண்டனில் வட்டார வழக்கு, பேச்சு மொழியை அடிப்படையாக வைத்து நாடகம் எழுதினார். நோபல் பரிசு கிடைத்தது. நூறு மடங்கு எழுதிய கிராவுக்கு கிடைக்க வேண்டிய பெருமை இன்னும் கிடைக்கவில்லை. அரசுகள் மதிக்கன்றதா என்பதல்ல பிரச்சினை. மக்கள் மத்தியில் மரியாதை இந்த வயதிலும் உள்ளது. இங்கு கூடியிருப்பதே அதற்கு சான்று. வாழ்நாள் சாதனை புரிந்துள்ளார். இளைய சமுதாயம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். கிராம சொற்கள், கதைகளை ஒதுக்கி விடக்கூடாது. இலக்கியத்துக்கு அடிப்படை அவை" என்று குறிப்பிட்டார். 

நூல் ஆய்வுரையாக கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், "படைப்பாளி விமர்சகனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உலகளவில் கொண்டாட தகுதியுடைய எழுத்தாளர் கி.ரா. எனது நிலத்தின் குரலை அவரது எழுத்தில் கேட்பேன். கி.ரா. கடிதங்களை வாசிப்பதே "சொகம்" என கூறவேண்டும். அது சமூக ஆவணம். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் உலக இலக்கியத்தில் சிறப்பிடம் பெறும்" என்று குறிப்பிட்டார். 

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசுகையில், "கன்னடகாரன் படிக்கிறான். அதனால் அங்குள்ள எழுத்தாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இங்கு படித்திருந்தால் நாஞ்சில் நாடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டிருப்பான். அதனால்தான் தைரியமாக எழுதுகிறேன். 3 லட்சம் ரூபாய் கொடுத்தால் டாக்டர் பட்டம் பெறலாம்.  டாக்டர் பட்டத்தை வைத்து நான் நாக்கு வழிக்கவா? மொழியை ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் கடத்தி கொண்டிருப்பவன் எழுத்தாளன்தான, பேராசிரியர்கள் அல்ல. கி.ரா படைப்பை மொழி பெயர்ப்பது கடினம். அதனால் உலக மொழிகளுக்கு செல்ல முடியவில்லை.பெரிய குறைகள் உண்டு. எம்.டி.வாசுதேவன் நாயருக்கு விருது கிடைத்தால் அவர் வீட்டின் முன்பு முதல்வர் நிற்கிறார். 

கி.ரா வீட்டுக்கு ஏதாவது ஒரு அமைச்சர் வந்துள்ளார்களா..?  அந்த சொரணை இங்கு இல்லை. தமிழ் புத்தி வேடிக்கை பார்ப்பதுதான். என் மிச்ச வாழ்நாளை எழுத்தாளர் கி.ராவுக்கு தர தயாராக இருக்கிறேன். வாசிப்பு இங்கு இல்லை. பல பிரபல எழுத்தாளர்கள் நூல்கள் நூறுதான் அச்சடிக்கப்படுகிறது. பல விருதுகள் சில்லைரை பாடு. பெரிய தலைவர்கள் இங்கு வரும்போது தமிழறிஞரை, பெரிய எழுத்தாளரை, இசையறிஞரை பார்க்கலாம். ஆனால், ஏன் நடிகர் ரஜினிகாந்தை சென்று பார்க்கிறார்கள்…? ஞானபீட விருது கிடைத்தால்கூட எழுத்தாளர் கிரா  முதல்வர் வீ்ட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும். காலுக்கு கீழ் குடம், குடமாய் பொற்காசு கொட்டி கிடப்பதை அறியாமல் டாலர் பிச்சை கேட்டு நிற்கிறோம். கொஞ்சம் யோசியுங்கள் " என்று வேதனையை பகிர்ந்தார். நடிகர் சிவக்குமார் பேசுகையில், "பண்டித தமிழ் செத்து போச்சு. பாமர தமிழ் அடிப்படையாக வைத்துதான் கம்பராமாயணம் பேசினேன். காய்ந்து போன மண்ணில் இருந்து வந்த மண்ணை ஆதரித்தது புதுச்சேரி. கிராவின் எழுத்துகள் சாகாவரம் பெற்றவை" என்று குறிப்பிட்டார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தலைவர் நல்லக்கண்ணு பேசுகையில், "நோய்கள், நெருக்கடி, சோதனை அவ்வளவையும் கடந்து நிற்கிறார் கிரா. நம்பிக்கையுடன் வாழ்கிறார். வாழ்வை புரிந்தவர். என்னை விட 3 வயது மூத்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து வகுப்புகளுக்கும் சென்றவர். ஏரியாவுக்கு ஏரியா சொற்கள் வித்தியாசம் உண்டு. எங்க ஊரில் வயல் என்று சொல்வார்கள். சிலர் காடு என்பார்கள். சொல் அகராதி தேவையா என்று சிலர் சொல்வார்கள். ஆனால் தேவை. சொல்வளம் புரியும். முதலில் நான் யோசித்தேன். கிரா நூல் வந்த பிறகுதான் உண்மை புரிந்தது. நிலத்தை காடு என்று வட்டார மொழியில் மக்கள் சொல்லி அதை இழந்து போராட்டம் நடத்தினோம். அதனால்தான் சொல் அகராதி மக்கள் வாழ்வை  புரிய வைக்கும்" என்று குறிப்பிட்டார்.

ஏற்புரையில், தன்னைப் பற்றி பேசிய ஒவ்வொருவர் பற்றியும் குறிப்பிட்டு பேசிய கி.ரா, “ இராமாயாணம், மகாபாரதம் இவற்றை விட சிலப்பதிகாரம்தான் சிறந்த இலக்கிய நூல். நம் மண்ணின் இலக்கியம்” என்றார். மேலும், நம் ஊரில் நேர்மையாணவர்கள் அரசியலுக்கு, ஆட்சிக்கு சரிவர மாட்டார்கள்” என நெடுமாறனையும், நல்லக்கண்ணுவையும் குறிப்பிட்டு, அவர்கள் இருவரும் தூதவளையுடன் நெய் கலந்து சாப்பிட்டு உடல் நலனை பாதுகாத்து கொள்ள வேண்டும்” என அக்கறையுடன் கூறினார்.

வாழும் காலத்தில் படைப்பாளிகளை பாராட்டி, பாதுகாக்காத சமூகம் எதிர்காலத்தில் அடையாளம் இழந்து போகும். அரசுகளுக்கு அடையாளம் குறித்து அக்கறையிருப்பதில்லை. அந்த வகையில் கிராவை அவரது மாணவர்களும், வாசகர்களும் போற்றி பாராட்டுவது புதுவைக்கு பெருமை.

-சுந்தரபாண்டியன்  

சார்ந்த செய்திகள்