சப்பான் நாட்டில் கவாசாகி நகரில் அமைந்துள்ள கொஅனா பன்னாட்டு பள்ளியில் (Kohana International School) சப்பான் தமிழ்ச்சங்கத்தின் முயற்சியாலும், அங்கு பயிலும் மாணவச் செல்வங்களுடைய பெற்றோர்களின் பேராதரவிலும் கோஅனா பன்னாட்டுப் பள்ளி நிர்வாகத்தின் முழுஒத்துழைப்புடனும் இந்த கல்வியாண்டு முதல் தாய்த்தமிழ் ஓர்பாடமாக பயிற்றுவிக்கப்பட விருக்கின்றது என சப்பான் தமிழ்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், "கொஅனா பள்ளி நிர்வாகத்துடன் மேற்கொண்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தமிழை பன்னாட்டுப்பள்ளியின் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், மாணக்கர்களின் பெற்றோர்களுடன் தமிழை பாடமாக கொண்டு வருவது குறித்த நோக்கம், செயல்திட்டம் மற்றும் பாடத்திட்டம் குறித்த விளக்கவுரை மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.
கலந்துரையாடலின் முடிவில் நடைபெறும் இக்கல்வியாண்டின் ஆகசுடு 30 ஆம்தேதி முதல் தமிழ்வகுப்புகள் இனிதே ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டதோடு தமிழாசிரியையாக பொறுப்பேற்கவுள்ள சகோதரி திருமதி.சன்முகப்பிரியா அவர்களுடைய அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது. இதன்மூலம் இனி சப்பான் நாட்டில் CBSE பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி IGCSE என்ற பன்னாட்டு பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களும் தாய்த்தமிழை ஓர் பாடமாக பயிலமுடியும் என்ற நிலையை ஏற்படுத்த இயலும்." என்கின்றது சப்பான் தமிழ்சங்கத்தின் அறிக்கை.