Skip to main content

திருச்செந்தூர் கோவிலில் தொடங்கியது 'தமிழில் அர்ச்சனை'-நாழிக்கிணறில் தீர்த்தமாட பக்தர்களுக்குத் திடீர் தடை!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

'Tamil Archana' started at Thiruchendur temple

 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுக்கேற்ப திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நேற்று முதல் தமிழில் அர்ச்சனை தொடங்கியது. ஆண்டாண்டு காலமாக தமிழக ஆலயங்களில் சமஸ்கிருதத்திலேயே வேத மந்திரங்கள் ஓதப்பட்டு அர்ச்சனையும் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழ் உணர்வாளர்கள் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதற்கேற்ப முன்னாள் முதல்வரான கலைஞர் 1996-2006ம் ஆண்டுகளில் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கான உத்தரவினைப் பிறப்பித்தார். ஆனால் அவரது ஆட்சிக்கு பின்பு வந்த அ.தி.மு.க. அரசு அந்த உத்தரவில் போதிய ஆர்வம் காட்டவில்லை. 

 

'Tamil Archana' started at Thiruchendur temple

 

இந்தச் சூழலில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். தொடர்ந்து தமிழ் உணர்வாளர்கள் இந்து அறநிலையத்துறை பொறுப்பில் வரும் அனைத்துக் கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும். அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற முதல்வர் அனைத்து சமுதாயத்தினரையும் அர்ச்சகராக நியமித்து முதற்கட்டமாக 58 பேருக்கு பணியாணை வழங்கினார். இந்த உத்தரவை ஏற்று இந்த சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு தமிழில் அர்ச்சனையை தொடங்கி வைத்தார்.

 

'Tamil Archana' started at Thiruchendur temple

 

இதேபோன்று அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ் அர்ச்சனை துவக்கவிழா நேற்று நடந்தது. கோவில் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தெய்வத் தமிழ்பேரவை நிர்வாகிகள், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர், மற்றும் ஆலையத்தின் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் தமிழில் அர்ச்சனை செய்பவரின் பெயர், அவரது தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் வெளியில் பக்தர்களுக்குத் தெரியும் வகையில் பலகையில் வைக்கப்பட்டது. தமிழில் அர்ச்சனை தேவைப்படுபவர்கள் அந்த அர்ச்சகரைத் தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

 

நாழிக்கிணறில் தீர்த்தமாட பக்தர்களுக்குத் தடை

 

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பிரசித்தி பெற்றது பக்தர்கள் புனித நீராடும் நாழிக் கிணறு உள்ளது. ஆலயத்தின் அருகிலும் அதன் பக்கமுள்ள கடற்கரையிலிருந்து சுமார் 80 அடி தொலைவில் அமைந்திருக்கிறது நாழிக் கிணறு. கடலுக்கு மிக அருகில் அமைந்திருந்தாலும் இதன் தண்ணீரில் உப்புத் தன்மை மிகவும் குறைந்து இருக்கும். ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு பின் இந்த நாழிக்கிணறில் புனித நீராடிவிட்டு, பின்னர் ஆலய வழிபாடு நடத்தி வருவர். ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடந்து வந்த நாழிக் கிணறில் நீராடல் கரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது கரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் நாழிக்கிணறு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராடி வந்தனர். 

 

'Tamil Archana' started at Thiruchendur temple

 

இந்தச் சூழலில் நாழிக்கிணறு பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத அளவிற்கு குறுகிய இடமாக இருந்ததால் தொற்று காரணமாக பக்தர்களுக்குத் திடீர் தடை விதிக்கப்பட்டது. இதனால் நாழிக்கிணறு மூடப்பட்டு போலீஸ் காவலில் கொண்டுவரப்பட்டது.

 

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர் நடந்தபோது படைவீரர்கள் குடிப்பதற்குத் தண்ணீரின்றி தவித்திருக்கிறார்கள். அது சமயம் கடற்கரை பகுதியில் இறைவனருளால் இந்த நாழிக்கிணறு தோன்றியதால் படை வீரர்கள் குறுகிய அளவிலிருக்கும் அந்தக் கிணறிலிருந்து தண்ணீரைப் பருகி இருக்கிறார்கள் என்பது ஐதீகம் என்கிறார்கள் ஆன்மீகப் பற்றாளர்கள். அதே போன்று கடற்கரையிலிருந்து 20 அடி தொலைவிலிருக்கும் செல்வ தீர்த்தத்தின் நீர் உப்புத் தன்மை இல்லாமல் நல்ல தண்ணீராக இருப்பதும் புனிதமானது. இவைகள் திருச்செந்தூர் ஆலயத்தின் சிறப்பான முக்கிய அம்சங்கள் என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.