Skip to main content

தமிழ்நிலத்தையே அழித்தொழிக்கும் நாசகாரத் திட்டம் அம்பலம்! மத்திய அரசுக்கு வேல்முருகன் கண்டனம்!

Published on 05/03/2018 | Edited on 05/03/2018
velmurugan



தமிழ்நிலத்தையே அழித்தொழிக்கும் டெல்லியின் நாசகாரத் திட்டம் அம்பலம்! இதற்கு முடிவுகட்ட தமிழ்நாடும் தமிழக அரசும் தயாராவோம் என கூறியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
 

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் (தேசங்கள்) இணைந்த ஒரு கூட்டாட்சி அமைப்புதான் இந்திய ஒன்றியம்.
 

இதில் மோடியின் பாஜக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து அது மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து அவற்றை அரசியல் அதிகாரமற்ற உள்ளாட்சி அமைப்பு என்ற நிலைக்கு மாற்றிக்கொண்டிருக்கிறது.
 

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை உள்ளாட்சி அமைப்பு என்ற நிலையில்கூட அல்ல; தமிழ் என்ற ஓர் இன அடையாளமே கூடாது என்று, தனது நலனுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் தமிழ்நிலத்தையே அழித்தொழிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது.
 

அதற்காக அது செயல்படுத்திவரும் நாசகாரத் திட்டம் இப்போது அம்பலமாகியிருக்கிறது.



தமிழ்நாட்டின் உயிராதாரமான விவசாய மண்டலமாக இருக்கும் காவிரி பாசனப்பகுதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் முதலான நச்சு வேதிப்பொருள்களை எடுப்பதற்கான 700க்கும் மேற்பட்ட கிணறுகளை அமைக்கும் பணிகளை ஓஎன்ஜிசி மூலம் முடுக்கிவிட்டிருக்கிறது மோடி அரசு.
 

இதனால் தமிழ்நிலம் எதற்கும் ஆகாத பாழ்நிலமாக்கப்படும்; அப்போது வாழ்நிலமாக அதைக் கொள்ள முடியாத நிலையில் தமிழினமே ஒட்டுமொத்தமாக இடம்பெயரும்; அப்படியாக தமிழினம் என்ற அடையாளமே இல்லாமல் போகும்; இப்படிக் கணக்குப் போட்டுத்தான் காரியத்தில் இறங்கியிருக்கிறது மோடி அரசு.
 

காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்” என்பதற்கு மாறாக அதனை அழித்தொழிக்கும் நாசகாரத் திட்டத்தினை ஓஎன்ஜிசி மூலம் டெல்லி செயல்படுத்திக் கொண்டிருப்பது ஆதாரங்களுடன் இன்று தெரியவந்திருக்கிறது.
 

இது குறித்து காவிரி டெல்டா கண்காணிப்பகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற்ற தகவல்களிலிருந்து இந்த வஞ்சகத் திட்டம் வெளிப்பட்டுள்ளது.
 

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் 219 கிணறுகள் குறித்த ஆவணங்கள் இருக்கின்றன; ஆனால் கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தன்வசம் 700 கிணறுகள் இருப்பதாக ஓஎன்ஜிசி சொல்கிறது என்பது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற்ற தகவல்களிலிருந்து தெரிய வருகிறது.
 

71 கிணறுகள் மட்டுமே இயங்கும் நிலையில் இருக்கின்றன; அவற்றிற்கும் செயல்படுவதற்கான சுற்றுசூழல் உரிமம் இல்லை என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவணம்.
 

ஆனால் 183 கிணறுகளில் உற்பத்தி நடப்பதாக ஓஎன்ஜிசி சொல்கிறது; மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவணங்களின்படி மேலே சொன்ன எந்த கிணற்றுக்கும் இயங்குவதற்கான ஒப்புதல் இல்லை.
 

இப்படி சட்டவிரோதமாகச் செயல்படும் ஓஎன்ஜிசியால் தொடர்ந்து விபத்துகள், நச்சு எண்ணெய் கசிவுகள். அதனால் விளைநிலங்கள் பாழ்பட்டன; நீர்நிலைகள் மாசுபட்டன. 2011 – 2018 காலத்தில் 8 எண்ணெய் கசிவு சம்பவங்கள். எண்ணெய் கொட்டிய எந்த இடத்தையும் மீட்டெடுக்க முடியவில்லை என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவண அறிக்கை. இதுபோல் பேரழிவு சம்பவங்கள் 2008லிருந்தே நடந்துவருகின்றன என்பதுதான் உண்மை; ஆனால் அப்போது விழிப்புணர்வு இல்லாததால் அவை தெரியவரவில்ல.
 

எந்த அனுமதியும் பெறாமல்தான் ஓஎன்ஜிசி இயங்கிவருகிறது என்பதுடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்க வேண்டிய பொது அமைப்பாக அது இருந்தும், சுற்றுச்சூழல் உரிமம் உள்ளிட்ட அடிப்படை விவரங்களைக் கேட்டால்கூட, ஏதாவது காரணங்களைக் காட்டி, அதைச் சொல்வதில்லை என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை கூறுகிறது.
 

ஆக, சட்டவிரோதமாகவே இந்த நாசகாரத் திட்ட தமிழ்நிலத்தில் செயல்படுத்தி வருகிறது மோடி அரசு.
 

இதற்கு முடிவுகட்ட தமிழ்நாடும் தமிழக அரசும் தயாராவோம் என அறைகூவி அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தொட்டாலே உதிர்ந்து விழும் கட்டிடம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.

Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.

மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.

Next Story

“அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நானே போராடுவேன்” - வேல்முருகன் எம்.எல்.ஏ

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

velmurugan struggle on behalf of against sipcot factories in Cuddalore

 

கடலூரில்  சிப்காட் தொழிற்சாலைகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.

 

கடலூர் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளை கண்டித்து நேற்று(10.10.2023) தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அதன் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர், மாநகராட்சி கவுன்சிலர் கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் போராட்டத்தை கைவிடுமாறு கூறப்பட்டது. ஆனால் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு வந்தனர். 

 

இந்த நிலையில் முற்றுகை போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். அதற்கு பதில் கடலூர் உழவர் சந்தை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கினர். இந்த நிலையில் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர், காலை கடலூர் உழவர் சந்தை பகுதியில் திரண்டனர். அங்கு நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ  தலைமை தாங்கி சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக பேசினார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், மாநகராட்சி கவுன்சிலருமான கண்ணன் வரவேற்று பேசினார். மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால் வளவன், மாநில அமைப்பு செயலாளர் கண்ணன், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ஆனந்த்,  மாநகர மாவட்டச் செயலாளர் லெனின், மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

 

பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடலூர் தொழிற்பேட்டையில், தொழிற்சாலை வளாகத்தில் இயங்கக்கூடிய பல்வேறு நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக ரசாயன உற்பத்திகளை செய்து வருகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றும் கழிவுகள் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கலப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் பல்வேறு மர்மமான நோய்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

என்எல்சி இந்தியா நிறுவனம் பழுப்பு நிலக்கரியை திறந்த வெளியில் கையாள்வதால் அதன் துகள்கள் படர்ந்து 250 மடங்கு மாசு ஏற்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. கடலூர் மாவட்டத்தில் தொழில் தொடங்குவதாகக் கூறி பொதுமக்களின் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி 10 ஆண்டுகள் தொழில் நடத்திவிட்டு, பின்னர் அந்த இடத்தை மனை வணிகமாக மாற்று தொழில் செய்து வருகின்றனர். அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது. அந்த இடத்தில் வேளாண்மை உள்ளிட்ட கல்லூரிகள் அல்லது கால்நடை பண்ணையுடன் கூடிய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். இதற்காக அந்த இடங்களை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் விரட்டியடிக்கப்பட்ட சாயப்பட்டறை ஆலைகள் சைமா என்ற பெயரில் பெரியப்பட்டில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கு மீண்டும் உயிர் கொடுத்து தொடங்கும் வேலை நடைபெற்று வருவதாக செய்திகள் வருகிறது. அந்த நிறுவனம் இங்கு தொடங்கப்படக்கூடாது. பரங்கிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை சுடு நீராக்கி கடலில் விடுவதால் கடல் நீர் மாசு படுவதோடு, கடல்வாழ் அரிய வகை உயிரினங்கள் அழிந்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாற்றப்பட்டுள்ளது.

 

மாசு ஏற்படுத்தும் ஆலைகளை பூட்டி சீல் வைக்க வேண்டும். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியமாற்று விகிதம் ஏற்படுத்தாமல் அடிமையாக வேலை வாங்கி வருகின்றனர். வெளி மாநில தொழிலாளர்களை அனுப்பிவிட்டு, தகுதி உள்ள உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தொழிற்பேட்டை அருகே முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தேன். ஆனால், மாவட்ட நிர்வாகம் ஆலைகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் தனியார் நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாக பேரணிக்கு அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்துடன் கலைந்து செல்ல கூறிவிட்டனர். இதற்கான பலனை எதிர்காலத்தில் அரசுகள் அனுபவிக்கும். சட்டமன்ற உறுதிமொழி குழு மூலம் ஆய்வு செய்து பல குற்றச்சாட்டுகள் வைத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த வேல்முருகன், அதில் ஒன்றை கூட மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளர் ஆணையம், மாவட்ட நிர்வாகம் சரி செய்யவில்லை. அதற்கான கால அவகாசம் அளித்து தான் இந்த போராட்டத்தை அறிவித்தேன்” என்றார்.

 

மேலும், கூட்டணி கட்சியில் இருந்தாலும் எங்கு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கு வேல்முருகன் களத்தில் நிற்பான் என்பதற்காக தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முன்னறிவிப்பின்றி நானே பூட்டுப் போடும் போராட்டத்தை முன்னெடுப்பேன். சாதி வாரி கணக்கெடுப்புக் கோரி ஜனவரி மாதம் கோட்டையை நோக்கி பேரணியை அறிவித்துள்ளேன். தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளுக்கான சமூக நீதி வழங்க வேண்டும். அதுவரை 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்” என்றார்.