Skip to main content

தமிழக நீரை கொள்ளையடிக்கும் கேரளா: வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: அன்புமணி கண்டனம்

Published on 26/02/2018 | Edited on 26/02/2018

 

கேரள அரசு கடந்த 6 நாட்களாக சிறுவாணி நீரை கொள்ளையடித்து வரும் நிலையில் அதை தடுத்து நிறுத்த தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது பொறுப்பான செயல் அல்ல என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையிலிருந்து கேரள அரசு ஒப்பந்தத்திற்கு விரோதமாக தண்ணீர் எடுத்து வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழகத்தை பழிவாங்கும் நோக்குடனான கேரளத்தின் இச்செயல் கண்டிக்கத்தக்கது.
 

கேரள மாநிலம் பாலக்காடு அருகிலுள்ள சிறுவாணி ஆற்றிலிருந்து கோவை மாநகருக்கு குடிநீர் எடுத்து வரப்படுகிறது. மொத்தம் 49.50 அடி உயரமுள்ள அணையிலிருந்து கோவையின் குடிநீர் தேவைக்கு ஏற்ப தினமும் 5 கோடி முதல் 7 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணை என்பது கோவைக்கான குடிநீர் ஆதாரம் என்பதால், அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி சிறுவாணி அணையிலிருந்து அப்பகுதியிலுள்ள தாவரங்கள் மற்றும் வன விலங்குகளின் தேவைக்காக வினாடிக்கு 5 கன அடி வீதம் மட்டுமே கேரளம் தண்ணீர் எடுக்க முடியும். அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டால் அது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையில் சேரும்.
 

ஆனால், கடந்த 6 நாட்களாக தேவையே இல்லாமல் சிறுவாணி அணையிலிருந்து கேரளம் அளவுக்கு அதிகமாக தண்ணீரை எடுக்கத் தொடங்கியுள்ளது. தொடக்கத்தில் வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீரை எடுக்கத் தொடங்கிய கேரளம் ஒரு கட்டத்தில் வினாடிக்கு 90 கன அடி வீதம் தண்ணீரை  திறந்து விட்டது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 18 மடங்கு அதிகமாகும். வழக்கமாக இந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டால் அது பில்லூர் அணைக்கு வந்து சேரும். ஆனால், இப்போது அட்டப்பாடி பகுதியில் கேரளம் 3 தடுப்பணைகளை கட்டி வைத்திருப்பதால் அந்த நீர் தமிழகத்திற்கு வருவதில்லை. இதே அளவில் இன்னும் சில நாட்களுக்கு கேரளம் தண்ணீரை திறந்தால் சிறுவாணி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து கோடைக்காலத்தில் கோவைக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும்.
 

சிறுவாணி அணையிலிருந்து கேரளம் அதிகமாக நீர் எடுப்பதில் எந்த நியாயமும் இல்லை; யாருக்கும் பயனும் இல்லை. சிறுவாணி அணையிலிருந்து திறக்கப்பட்டு அட்டப்பாடி தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு அப்பகுதியில் பாசனம் செய்ய கேரளம் திட்டமிட்டிருந்தாலும், இப்போது அங்கு விவசாயம் நடைபெறவில்லை என்பதால் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. கேரளம் இவ்வாறு செய்வதற்கு காரணம் தமிழகத்தை பழி வாங்க வேண்டும் என்பது தான். கேரள அரசின் இப்பழி வாங்கல் நோக்கம் கூட நியாயமற்றது; வஞ்சக எண்ணம் கொண்டதாகும். பரம்பிக்குளம்  - ஆழியாறு ஒப்பந்தப்படி கேரளத்திற்கு தமிழகம் தண்ணீர் வழங்கவில்லை என்று கூறி கேரளத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை திருப்திப்படுத்தவே சிறுவாணி அணையிலிருந்து அதிக தண்ணீரை எடுத்து கேரளம் வீணடிக்கிறது.

பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தப்படி தமிழகம் தண்ணீர் வழங்கவில்லை என்ற கேரளத்தின் புகார் அடிப்படை ஆதாரமற்றதாகும். 1973-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு, அதற்கு 15 ஆண்டுகள் முன்பாக  1958-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தப்படி கேரளத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சோலையாறு அணையிலிருந்து 12.30 டி.எம்.சி, ஆழியாறு அணையிலிருந்து 7.25 டி.எம்.சி என மொத்தம் 19.55 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். இதில் முறையே 10.50 டி.எம்.சி, 5 டி.எம்.சி என மொத்தம் 15.50 டி.எம்.சி நீர் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள  4.05 டி.எம்.சியை அடுத்த 4 மாதங்களில் வழங்கினால் போதுமானது. இதை கேரளமும் ஒப்புக்  கொள்கிறது. 
 

ஆனால், பாலக்காடு மாவட்டத்திலுள்ள பயிர்களைக் காப்பாற்றுவதற்காக ஆழியாறு அணையிலிருந்து வழங்கப்பட வேண்டிய 2.25 டி.எம்.சி நீரை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தான் கேரள விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆழியாறு அணையில் போதிய நீர் இல்லாத நிலையில், கேரளத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவது சாத்தியமற்றது. இதைக்கூட உணராமல் கேரள விவசாயிகளின் போராட்டத்தை அம்மாநில அரசு ஊக்குவிப்பதும், அவர்களை திருப்திப்படுத்த சிறுவாணி அணையிலிருந்து அதிக நீரை திறந்து வீணடிப்பதும் நியாயமான நடவடிக்கையல்ல. இது இரு மாநில மக்கள், விவசாயிகளிடையே தேவையற்ற கசப்புணர்வை ஏற்படுத்தி விடும். இதை உணர்ந்து சிறுவாணி அணையிலிருந்து அதிக தண்ணீரை எடுப்பதை கேரள அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
 

கேரள அரசு கடந்த 6 நாட்களாக சிறுவாணி நீரை கொள்ளையடித்து வரும் நிலையில் அதை தடுத்து நிறுத்த தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது பொறுப்பான செயல் அல்ல. உடனடியாக கேரள அரசையும்,  மத்திய அரசையும் தொடர்பு கொண்டு சிறுவாணி ஆற்றிலிருந்து அதிக நீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். கோவை மாநகருக்கு கோடைக் காலத்திலும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.