ADVERTISEMENT

‘பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்..’ ஆதரவற்றவர்களின் பசி நோய்க்கு உணவளிக்கும் இளைஞர்கள்..

09:45 AM May 22, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை கடைகளில் உணவு வாங்கிச் சாப்பிட்ட ஆதரவற்ற, மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வ இளைஞர்கள் உணவு வழங்கி, கரோனாவைவிட கொடிய பசி என்னும் நோயிலிருந்து பலரையும் மீட்டுவருகின்றனர்.

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு போடப்பட்ட நிலையில் பேருந்துநிலையம், கோயில்கள், தெரு ஓரங்களில் தங்கியிருந்த ஆதரவற்றவர்களும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் உணவுக்காக தவித்தபோது அவர்களின் இருப்பிடம் தேடிச் சென்று இளைஞர்கள் உணவு வழங்கினார்கள். அதே போல அரிசி, காய்கறி போன்ற நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்கள். அதேபோல, தற்போது தொற்று வேகமாகப் பரவி உயிர் பலி ஏற்படுத்திக்கொண்டிருக்கும்போது மீண்டும் தன்னார்வ இளைஞர்கள் உணவு வழங்கி பசி நோயைப் போக்கி வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் சுற்றுலாத் தளம் மூடப்பட்டதால், பார்வையாளர்கள் யாரும் வராததால் அங்கு வசிக்கும் குரங்குகளுக்கு உணவு கிடைக்காமல் தவித்தபோது, அன்னவாசல் போலீசார் தினசரி உணவு வழங்கிவருகின்றனர். அதேபோல புதுக்கோட்டை நகரப் பகுதியில் தங்கியிருந்த ஆதரவற்ற பலரும் உணவுக்காக தவிப்பதை அறிந்து ஆயுதப்படை தலைமைக் காவலர் சரவணன் தனது வீட்டிலேயே உணவு தயாரித்து, நகரெங்கும் தேடிச் சென்று உணவு வழங்கி மகிழ்கிறார்.

இதேபோல கீரமங்கலம் பகுதிகளிலும் இளைஞர்கள் ஆதரவற்றவர்களைத் தேடிச் சென்று உணவு வழங்கிவருகின்றனர். இதேபோல தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சின்னையா தெருவில் ஓட்டல் நடத்திவந்த சிவா தினசரி காலை 200 பேருக்கு உணவு வழங்கி, கரோனாவைவிட கொடிய நோயான பசியைப் போக்குகிறார். இதுகுறிது அவர், “இப்ப ஊரடங்கால் கடைகள் இல்லாததால் பலர் பசியால் கிடப்பதைப் பார்த்து என்னால் முடிந்த காலை உணவு 200 பேருக்கு கொடுக்கிறேன்” என்றார்.

பேராவூரணியில் லயன்ஸ் கிளப் ஆஃப் மனோரா என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், 'பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்' என்ற பதாகையுடன் 100 உணவு பொட்டலங்களையும் அருகில் கிருமி நாசினியையும் வைத்துள்ளனர். இந்தத் திட்டத்தை பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தொடங்கிவைத்தார். மேலும், வேறு எந்த தேவையானாலும் கீழே உள்ள எண்களில் தொடர்புகொள்ளுங்கள், உதவ தயாராக இருக்கிறோம் என்கின்றனர்.

இதுகுறித்து லயன்ஸ் கிளப் ஆஃப் மனோரா வைச் சேர்ந்த இளைஞர்கள் நம்மிடம், “கஜா புயல் தொடங்கி நிவாரணங்கள் வழங்க தொடங்கினோம். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காலத்தில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மேல் அரிசி, காய்கறி போன்ற உணவுப் பொருட்கள் வழங்கினோம். இந்த வருடம் நிவாரணம் வழங்குவதுடன் ஆதரவற்றவர்களுக்காக 'பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்' என்று உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். அடுத்து சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல ஊர்களிலும் உணவு வழங்க இருக்கிறோம்” என்றனர். பசி நோய்க்கு யாரும் பலியாகிவிடக் கூடாது என்று உணவை மருந்தாக வழங்கிவரும் இளைஞர்களைப் பாராட்டுவோம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT