Skip to main content

டிடிவி தினகரன் இல்லத்தில் கூடிய ஆதரவு எம்எல்ஏக்கள்

Published on 14/06/2018 | Edited on 14/06/2018

 

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.

 

 

 

 

பின்னர், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல நாட்கள் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர், கொறடா, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்காக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் பலர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

 

 


தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக ஆதரவு எம்எல்ஏக்களை டிடிவி தினகரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை அடையாறு இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். மேலும் வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.  


 

 

 

சார்ந்த செய்திகள்