Skip to main content

காதல் ஜோடி அடித்துக்கொலை - காவிரியில் உடல்கள் மீட்பு!

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
h

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சூடைக் காந்த பள்ளி எனும் கிராமத்தைச்  சேர்ந்த சுவாதியும்,  இளைஞர் நந்தீஸ் என்பவரும்   காதலித்து வந்துள்ளனர்.   இருவரும் வேறு வேறு சாதி என்பதால் கடும் எதிர்ப்பு நிலவியதை அடுத்து,  கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டுச் சென்று திருமணம் செய்துகொண்டார்கள்.  திருப்பூரில் தங்கியபடி இருவரும் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

 

திடீரென இருவரும் காணாமல் போனார்கள். 13.11.2018 அன்று, நந்தீஸும் சுவாதியும் கர்நாடகா மாண்டியா பகுதியில் காவேரியில் பிணமாக கரை ஒதுங்கியுள்ளனர். உள்ளூர் மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்க, உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து அவர்கள் இருவரும் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட நந்தீஸ்-சுவாதி இணையர்கள்தான் என்பதை கண்டறிந்தது கர்நாடக காவல்துறை.

 

பிணக்கூறாய்வு மூலம்,  இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், சுவாதி மூன்றுமாதக் கர்ப்பிணி என்பதும் கண்டறியப்பட்டுள்ளன.

 

  இருவரும் சாதி ஆணவத்தால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுவாதி கொலை வழக்கு... பெற்றோரின் இழப்பீடு மனு தள்ளுபடி!

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Swathi case...Parents' compensation petition dismissed!

 

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான சுவாதி கடந்த 2016 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ம் தேதி, காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் நடைபெற்ற இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கியது. இதையடுத்து, சுவாதி கொலை வழக்கு தமிழக அரசியல் களத்திலும் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியது.

 

இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம், மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவத்தின் மகன் ராம்குமார்தான் சுவாதியைக் கொலை செய்தார் எனத் தெரியவந்தது. இதையடுத்து, ராம்குமாரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். போலீசார் கைது செய்யச் சென்றபோது, ராம்குமார், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம்குமார், பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சுவாதி கொலையில் ஆரம்பம் முதலே பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் யாரோ ஒருவரை காப்பாற்றுவதற்காக ராம்குமார் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

 

இந்த நிலையில்தான், கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 18-ம் தேதி, சிறையில் மின்சார வயரைக் கடித்து, ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்பொழுது வரை மர்மம் நீடிக்கும் இந்த சம்பவத்தில் சுவாதியை இழந்த பெற்றோர் தரப்பில் மூன்று கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையின் அலட்சியம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே மூன்று கோடி ரூபாய் இழப்பீட்டை நீதிமன்றம் பெற்றுத்தர வேண்டும் என சுவாதியின் தாய் ரெங்கநாயகி தெரிவித்திருந்தார். இந்த வழக்கில், ரயில்வே பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது. இது திட்டமிட்ட கொலை என ரயில்வே நிர்வாகம் பதிலளித்தது. இந்நிலையில் இழப்பீடு கோரி உரிமையியல் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் சுவாதி பெற்றோரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

 

 

Next Story

ஸ்வாதி கொலை! ராம்குமார் தற்கொலை வழக்கில் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு! 

Published on 11/09/2020 | Edited on 11/09/2020
ddd

 

 

நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் இளம்பெண் ஸ்வாதி  கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் கடந்த 2016-ல் நடந்தது. அந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. அதேசமயம், இந்த சம்பவத்தை சூமோட்டோவாக எடுத்து வழக்குப் பதிவு செய்தது மாநில மனித உரிமைகள் ஆணையம்.  

 

இந்த வழக்கு கிடப்பில் கிடந்த நிலையில், இன்று அந்த வழக்கு தொடர்பாக உத்தரவுபிறப்பித்துள்ளது ஆணையம். அதன்படி, புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார்,  உதவி ஜெயிலர் பிச்சாண்டி, தலைமை  வார்டன் சங்கர்ராஜ், முதல் நிலை வார்டன்கள் ராம்ராஜ்,  பேச்சிமுத்து ஆகியோர் வருகிற செப்டம்பர் 30-ஆம்  தேதி காலை 10.30 மணிக்கு மாநில மனித உரிமை ஆணையத்தின் பொறுப்பு தலைவர் துரை ஜெயச்சந்திரன் முன்பாக ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.