ADVERTISEMENT

எஸ்.வி.சேகரின் வருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு கைது தடையும் நீட்டிப்பு! 

07:25 AM Sep 10, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் எஸ்.வி.சேகர் பதிவிட்ட வீடியோவில், காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் தமிழக முதல்வர், தேசிய கொடியில் அந்த நிறத்தை கிழித்துவிட்டு சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றப் போகிறாரா? எனப் பேசியிருந்தார்.

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக்கூடும் என எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி சேகர் மன்னிப்பு கேட்டால் கைது செய்ய மாட்டோம் என, காவல்துறை தெரிவித்தது. எஸ்.வி.சேகரும், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தன் வாழ்நாள் முழுவதும் இனி ஒருபோதும் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என உத்தரவாத மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தெரிவித்த வருத்ததை ஏற்றுக்கொள்வதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை செப்டம்பர் 14- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, அதுவரை கைது செய்யக்கூடாது என்ற உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT