Skip to main content

“எங்க அப்பா அப்படி, தாத்தா இப்படின்றதை எல்லாம் வீட்டோட வச்சுக்கணும்” - எஸ்.வி. சேகருக்கு அண்ணாமலை பதிலடி

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

S.V. Annamalai reply to Shekhar

 

பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து விமரிச்சித்து வருவதோடு, பல்வேறு விவாத நிகழ்ச்சிகளில் கூட அவரை கடுமையாக சாடி வருகிறார். இதையடுத்து சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு அண்ணாமலை குறித்து தொடர்ந்து எதிர்க் கருத்து வெளியிட்டு வருவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகாரி அளித்திருந்தார். 

 

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம்  இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “நான் யாருக்கும் விரோதி இல்லை. என்னைப் பிடிக்கவில்லை என்றால் தாராளமாக டெல்லிக்குச் செல்லுங்கள். இண்டிகோ விமானத்தில் 6000 ரூபாய்தான் டிக்கெட், உங்களால் முடியவில்லை என்றால் நாங்கள் டிக்கெட் போட்டுத் தருகிறோம். பழைய பஞ்சாங்கத்தை வைத்து யாராவது கட்டுப்படுத்தலாம் என்று நினைத்தால் நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன், அதில் மிகவும் தெளிவாக இருக்கிறேன். நான் எல்லாரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய மனிதன். எங்கிட்ட வந்து நாங்க அந்த காலத்தில் அப்படி இருந்தோம், இப்படி இருந்தோம், எங்க அப்பா அப்படி இருந்தாரு, எங்க தாத்தா இப்படி இருந்தாரு என்பதெல்லாம் உங்க வீட்டோட வைத்துக்கொள்ளுங்கள். இது எஸ்.வி சேகருக்கு மட்டுமல்ல, அவர் கூட இருக்கும் அனைவருக்கும் தான். உங்கள் பழம்பெருமை கதையெல்லாம் எங்கிட்ட சொல்லிக் கட்டுப்படுத்த முடியாது. வேண்டும் என்றால் டெல்லி போங்க, பேசுங்க என்னைத் தூக்குவதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். 

 

கட்சியிலேயே சிலர் பழம்பெருமை பேசுகிறார்கள். பாஜக தனி நபர்களுக்குச் சொந்தமானது இல்லை. எல்லாருக்குமான கட்சிதான். இது ஒரு காட்டாற்று வெள்ளம், ஒருத்தரோ அல்லது இரண்டு பேரோ கட்டுப்படுத்த முடியாது. அண்ணாமலையைப் பொறுத்த வரை இப்படிதான் இருப்பேன். உங்களால் முடிந்ததை பாரத்துக்கோங்க. தலைவராக இருந்தாலும், இப்படிதான், தொண்டனாக இருந்தாலும் இப்படித்தான் அண்ணாமலை இருப்பான். எனக்குக் கொஞ்சம் திமிரு அதிகம். வீட்டுக்குப் போய் மாட்டப் பிடித்தாலும் இப்படித்தான் இருப்பேன், ஆட்டை பிடித்தாலும் இப்படித்தான் இருப்பேன், தலைவனானாலும் இப்படித்தான் இருப்பேன். ஆக அண்ணாமலை தலைவனானதால் நாங்கள் சொல்லும்படித்தான் கேட்க வேண்டும் என்றால், என்னால் அப்படி எல்லாம் என்னால் இருக்க முடியாது. தொண்டர்களுக்காகவும், கட்சிக்காகவும் இருக்கும் தலைவன் நான், என்னிடம் இதுபோன்ற வேலைகளெல்லாம் நடக்காது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.