
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, எஸ்.வி.எம் நகரைச் சேர்ந்தவர் இமயராணி(44) குழந்தை இல்லாத சூழலில் கருத்துவேறுபாடு காரணமாக கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 5-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மறுநாளே இவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 12- ம் தேதி வீட்டை சுத்தம் செய்யும் போது இமயராணியின் செல்போன் சிக்கியுள்ளது. அதில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக பதிவிட்ட ஆடியோ இருந்துள்ளது. அதில் பக்கத்து வீட்டுக்காரரான ராணுவ வீரர் கார்த்திகேயன், தன்னை காதலித்ததாகவும் தன்னிடம் இருந்து 12 சவரன் நகை, பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், மேலும் கார்த்திகேயனின் மனைவி, மகன் ஆகியோர் தன்னை ஊர்மக்கள் மத்தியில் அவதூறாக பேசியதால் அவமானப்பட்டு தற்கொலை செய்துகொள்வதாக பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் பத்மினி வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பள்ளிகொண்டா காவல் துறையினர் இன்று அரசு மருத்துவக்குழு, வருவாய் துறை உள்ளிட்டோர் முன்னிலையில் 24 நாட்களுக்கு பிறகு உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் இது தொர்பாக பள்ளிகொண்டா காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.