Skip to main content

நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும்! - கேஸ் ஏஜென்ஸிகளில் திடீர் சோதனை நடத்த உத்தரவு!

Published on 29/10/2020 | Edited on 29/10/2020
vb

 

நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க,  கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என,  எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,  சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

 

அந்த மனுவில், சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிகளுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படும் நிலையில், இந்தத் தொகையை சிலிண்டர்களை டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல், ஏஜென்சிகளே எடுத்துக் கொள்கிறது. மேலும், டெலிவரிக்காக நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும்படி, டெலிவரி செய்யும் நபர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த வகையில்,  பொதுமக்களின் பணம் 500 கோடி ரூபாய்க்கு மேல் சுரண்டப்படுகிறது. இதைத் தவிர்க்க டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை மற்றும்  அடையாள அட்டைகள் வழங்கி, அவர்களின் பணியை வரன்முறை செய்ய வேண்டும் எனக்  கோரியிருந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சமையல் எரிவாயு வினியோக உரிமை ஒப்பந்தம் செய்யும் போதே, பல்வேறு விதிமுறைகள்  விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்கும் போது கூடுதல் கட்டணம் வசூலித்தால்,  சம்பந்தப்பட்ட வினியோக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் எனவும்,  தொடர்ந்து இந்த முறைகேடுகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜெனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எண்ணைய் நிறுவனங்கள் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நுகர்வோர்களின் புகார்களை மட்டும் எதிர்பார்க்காமல்,  கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டனர். மேலும், இதுவரை நுகர்வோர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கேஸ் ஏஜென்சிகள் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்தும்,  புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஜனவரி 8- ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

எண்ணூரில் கடையடைப்பு போராட்டம்!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Lockdown struggle in Ennoor

சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி (26.12.2023) நள்ளிரவு 11:45 மணியளவில் உள்ள குழாய்களில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னகுப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டது. இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கை மற்றும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

அதே சமயம் இது தொடர்பான வழக்கு இன்று (06.02.2024) பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 42 வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எண்ணூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் 33 மீனவ கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கடையடைப்பு போராட்டமானது இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Next Story

அம்மோனியா வாயுக் கசிவு விவகாரம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முடிவு

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Ammonia gas leak issue The government decided to compensate the victims

சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், கடந்த 26 ஆம் தேதி (26.12.2023) நள்ளிரவு 11:45 மணியளவில் உள்ள குழாய்களில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டது. இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கை மற்றும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

இந்நிலையில் எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இழப்பீடு தொகை தொடர்பாக ஒரு சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அமோனியா கசிவு விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரின் தனிச் செயலாளர் தலைமையில் நேற்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் இது குறித்து அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.