Skip to main content

சிறுவன் கொலை வழக்கு; குற்றவாளிக்கு மரண தண்டனை குறைப்பு 

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Supreme Court reduced the sentence accused by boy case

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன், மகேஸ்வரி தம்பதியரின் மகன் சுரேஷ்(வயது7). கடந்த 2009ம் ஆண்டு கொளஞ்சிநாதன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அப்போது சுரேஷ் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தபோது பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். 27.07.2009 அன்று சுரேஷ் பள்ளிக்குச் சென்றுவிட்டு வேனிலிருந்து இறங்கி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது அவனை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்திச் சென்றனர். மகன் வீடு திரும்பாததால் மகேஸ்வரி கம்மாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 

அன்றைய மறுநாள் மகேஸ்வரியின் செல்போனை தொடர்பு கொண்ட மர்ம நபர் சுரேஷை கடத்தி வைத்திருப்பதாகவும் அவனை விடுவிக்க வேண்டும் என்றால்  5 லட்சம் தர வேண்டும், போலீசுக்குப் போனால் அவனை உயிரோடு பார்க்க முடியாது என்று மிரட்டினான். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து சுரேஷை மீட்கும் முயற்சிகளில் இறங்கினர். அதனைத் தொடர்ந்து அடிக்கடி மகேஸ்வரியுடன் பேசிய மர்ம நபர் பேசிய தொலைப்பேசிகள், செல்போன் நம்பர்களை வைத்து அந்த நபர் எங்கிருந்து பேசினான் என்பதை போலீசார் கண்டுபிடித்து பின் தொடர்ந்தனர். முதலில் திட்டக்குடியில் உள்ள ஒரு காயின்பாக்ஸ் ஃபோனில் இருந்து அந்த நபர் பேசினான். இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது அந்த நபர் இருப்பிடத்தை மாற்றி ரூ.5 லட்சத்துடன் பெரம்பலூர் வருமாறு மகேஸ்வரியிடம் கூறினான்.

 

இதனால் மகேஸ்வரியும் தனிப்படை போலீசாரும் பெரம்பலூர் சென்றனர். ஆனால் கடத்தல்காரனிடமிருந்து வேறு எந்தத் தகவலும் வரவில்லை. அதே நேரத்தில் மகேஸ்வரியின் உறவினரான பாலாயி என்பவரும் சுந்தரராஜன் என்ற அவரது ஆண் நண்பரும் பெரம்பலூரில் சுற்றியபடி மகேஸ்வரியை கண்காணித்தனர். இதைக் கண்டுபிடித்த போலீசார் அந்த இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது சுரேசை கடத்தி சாக்கு மூட்டையில் கட்டி பெரம்பலூர் அருகே உள்ள குண்டலம் ஏரியில் வீசியதாகத் தெரிவித்தனர்.  இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் ஏரிக்குள் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டுக் கிடந்த மாணவனின்  உடலை மீட்டனர். இந்த வழக்கில் கம்மாபுரம் போலீசார்,  சுந்தரராஜன்(25), பாலாயி(34) ஆகியோரை கைது செய்தனர்.

 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கடந்த 2010 செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று மரண தண்டனை உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த தண்டனை 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுந்தரராஜன் தனது தண்டனையைக் குறைக்க மேல்முறையீடு செய்திருந்தார். இதன் தீர்ப்பு நேற்று வெளியானது அதில், அவர் குற்றம் செய்தபோது அவருக்கு 23 வயது. மற்றும் 2009 முதல் சிறையில் இருக்கிறார். 2013ல் சிறையிலிருந்து தப்பிக்கும் முயற்சியைத் தவிர, அவரது நடத்தை திருப்திகரமாக இருந்தது. இதன் காரணமாக அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மரண தண்டனையின் விளிம்பில் இருந்தவருக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் வழக்கு; தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The Supreme Court ordered the Election Commission officer to appear

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

இத்தகைய சூழலில் விவிபேட் தொடர்பான இந்த வழக்கில் இன்று (24.04.2024) உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இன்று காலை இந்த இடைக்கால் உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. அதாவது ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன.

தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா. அல்லது விவிபேட்டில் உள்ளதா. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா. விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா. மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

The Supreme Court ordered the Election Commission officer to appear

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.