
சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 23ஆம் தேதி (23.04.025) நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனையை நடத்துவதாக அரசு சார்பில் கூறுவதை ஏற்க முடியாது.
எங்களுக்கு முன் உள்ள ஆவணங்களை அடிப்படையாக வைத்தே குற்றம் நடந்துள்ளதா? என விசாரிக்க முடியும். எனவே அமலாக்கத்துறையின் சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா? என்பதை விசாரிக்க முடியாது. அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேசநலனுக்கானது. அதே சமயம் சோதனையின்போது டாஸ்மாக் ஊழியர்களை நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பியது ஏற்கத்தக்கதல்ல” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து அமலாக்கத்துறையின் சோதனை தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று (22.05.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். அதாவது, ‘இந்த சோதனை ஏற்புடையது அல்ல’ என்று வாதிட்டார். அச்சமயத்தில் தலைமை நீதிபதி, “தனி நபர்கள் செய்த விதிமுறை மீறலுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா?. அமலாக்கத்துறை வரம்பு மீறி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனி நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் நீங்கள் (அமலாக்கத்துறை) எப்படி விசாரிக்க முயற்சிப்பீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “இந்தியா அடிப்படையில் ஒரு கூட்டாட்சி நாடு ஆகும். அந்த அமைப்பிற்கு எதிராக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. வரம்புகள் அனைத்தையுமே மீறி அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டார். அதோடு அமலாக்கத்துறைக்குக் கடுமையான கண்டனத்தையும் அவர் தெரிவித்தார். அதே சமயம், “விதிகள் எதையும் மீறவில்லை” என அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ முன்வைத்தார். இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, “பல்வேறு ஆவணங்கள் இந்த விவகாரத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களையும் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்ற கோரிக்கையும் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையின் சோதனைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.