Skip to main content

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை விரைவாக தமிழ் மொழியில் வெளியிட வேண்டும்! பாமக வலியுறுத்தல்

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 

தமிழ்நாடு சார்ந்த முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை விரைந்து தமிழில் மொழிபெயர்த்து உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

உச்சநீதிமன்றத்தின் முக்கியமான தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்திருக்கிறார். இது மிகவும் வரவேற்கத்தக்கது. எனினும், முதற்கட்டமாக வெளியிடப்பட்ட 100 தீர்ப்புகளில் ஒன்று கூட தமிழில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
 

இந்தியக் குடியரசுத் தலைவரின் அறிவுரையை ஏற்று, ஆங்கிலம் தெரியாத வழக்குதாரர்கள் தங்களின் வழக்கு குறித்த விவரங்களை தாங்களே படித்து தெரிந்து கொள்ள வசதியாக, ஒவ்வொரு மாநிலத்தையும் சேர்ந்த மேல்முறையீடுகள் மீதான தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட மாநில மொழியிலும் மொழி பெயர்த்து வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. முதற்கட்டமாக   ஆந்திரா, அஸ்ஸாம். சத்தீஸ்கர், தில்லி, ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், மராட்டியம், ஒதிஷா, திரிபுரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய 12 மாநிலங்களைச் சேர்ந்த 100 வழக்குகளின்  தீர்ப்புகள் தெலுங்கு, அஸ்ஸாமி, இந்தி, மராத்தி, ஒரியா, வங்காளம், இந்தி ஆகிய 7 மொழிகளில்  மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை குடியரசுத் தலைவர் வெளியிட்டிருக்கிறார்.


 

 

உச்சநீதிமன்றத்தின் சார்பில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி அதிகாரப்பூர்வமற்ற வகையில் வெளியிடப்பட்ட செய்தியில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிடும் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் தவிர இந்தி, கன்னடம், ஒரியா, தெலுங்கு, அஸ்ஸாம் ஆகிய 5 மொழிகளிள் சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வழக்குகள் மொழியாக்கம் செய்து தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்தப் பட்டியலில் தமிழ் இல்லாதது குறித்து தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப் படவுள்ள முதற்கட்ட மாநில மொழிகள் பட்டியலில் தமிழும் சேர்க்கப்படும் என்று விளக்கமளிக்கப்பட்டது.


 

supreme-court-delhi



இதனால் தமிழ் மொழியிலும் முதல் கட்டத்திலேயே தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் மொழியில் தீர்ப்புகள் வெளியாகாதது மிகவும் வேதனை அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தால் முதலில் அறிவிக்கப்பட்ட 5 மொழிகள் பட்டியலில் இடம் பெறாத மராட்டியம், வங்காளம் ஆகிய மொழிகளில் கூட தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதிலும் குறிப்பாக முதல் கட்டத்திலேயே தமிழ் மொழியிலும் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே உறுதியளித்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதன்படி நடக்காதது தமிழர்களின் மனங்களை காயப்படுத்தியுள்ளது.


 

 

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுவதென தலைமை நீதிபதி முடிவெடுத்தது உண்மையாகவே புரட்சிகரமான நடவடிக்கை ஆகும். அதற்காக தலைமை நீதிபதியை எவ்வளவு பாராடினாலும் தகும். அதேநேரத்தில் தீர்ப்புகளை மொழிபெயர்ப்பதில் உலகின் மூத்த மொழிகளில் ஒன்றானதும், உச்சநீதிமன்றத்திற்கு அதிக வழக்குகளை அனுப்பும் மாநிலத்தின் மொழியானதுமான  தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். முதல்கட்ட மொழிபெயர்ப்பு தீர்ப்புகளில் தமிழ் இடம் பெறாத நிலையில், தமிழ்நாடு சார்ந்த முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை விரைந்து தமிழில் மொழிபெயர்த்து உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

'என்னாது எண்ணி முடிக்க இவ்வளவு நாள் ஆகுமா?' -நீதிமன்றம் சொன்ன பதில்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதி வருடத்திற்கு கொண்டு வந்த பொழுது, அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்படுகிறது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.

nn

இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், 'இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 என்ற தொகுதிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது' என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.