Skip to main content

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் விவகாரம்- பரபரப்பை கூட்டிய உச்சநீதிமன்றம்

Published on 18/06/2025 | Edited on 18/06/2025
Poovai Jaganmoorthy

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் உள்ள 16 வயது சிறுவனின் அண்ணன் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அந்த சிறுவனைக் கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் காரில் கடத்தி சென்று மிரட்டினார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 16.06.2025 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேல்முருகன், இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியும், ஏ.டி.ஜி.பி. ஜெயராமும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது இந்த வழக்கு விசாரணையின் போது ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜி.பி. ஜெயராமை கைது செய்யுங்கள் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் காவல்துறையின் பாதுகாப்பில் வையுங்கள் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமை காவல் சீருடையிலேயே போலீசார் கைது செய்தனர். நேற்லிருந்து  பூவை ஜெகன்மூர்த்தியிடமும், ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடமும் துருவி துருவி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

supreme court

குற்ற வழக்கில் கைது செய்யப்படும் அரசு ஊழியர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து நேற்று உள்துறை செயலாளர் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தன்னை கைது செய்ய பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது '28 ஆண்டுகள் பணியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி மீது இதுபோன்ற நடவடிக்கையை அரசு எடுத்தது ஏன்?' என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், 'இந்த வழக்கில் தமக்கு தொடர்பு இல்லை என்ற கருத்தை மனுதாரர் ஏடிஜிபி ஜெயராம் தரப்பு முன்வைத்த நிலையில் அவருடைய வாதத்தை ஏற்று தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க வேண்டும்' என  தெரிவித்துள்ளது.

'விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பதாக சொன்ன பிறகும் ஏன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்' என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு, 'ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான உரிய விரிவான விளக்கத்தை நாளை பதிலாக கொடுக்க வேண்டும்' என தமிழக காவல் துறைக்கும் தமிழக அரசிற்கும் சம்மன் பிறப்பித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்