/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/senthil--balaji-art_6.jpg)
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்குத் தமிழக அமைச்சரவையிலும் இடம் அளிக்கப்பட்டது. அதன்படி, அவர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராகக் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பதவி வகித்து வந்தார். அதே சமயம் ஜாமீன் பெற்ற உடனே செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வித்யா குமார் என்பவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி உரியப் பதிலை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. அதற்குச் செந்தில் பாலாஜி தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 23ஆம் தேதி (23.04.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘அமைச்சர் பதவியா? ஜாமீனா? என்பதைச் செந்தில் பாலாஜி தரப்பு தெரிவிக்க வேண்டும்’ எனக் கூறி வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இத்தகைய பரபரப்பான சூழலில் தான் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அவர் வகித்து வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்குக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அதே போல் மின்சாரத்துறையை, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (28.04.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “செந்தில் பாலாஜி போன்றவர்கள் அதிகாரமின்றி நீண்ட நாட்கள் இருக்க முடியாது. எனவே இது தொடர்பாகத் தனி உத்தரவு தேவை. மேலும் ஜாமீன் நிபந்தனையில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். செந்தில் பாலாஜி அதிகாரம் மிக்க நபராக இருக்கும் காரணத்தால், அவர் எந்த பதவியும் வகிக்கக் கூடாது. இந்த வழக்கு முடியும் வரை செந்தில் பாலாஜி எந்த பொறுப்பும் வகிக்கக் கூடாது” என வாதிட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sc-art-new_37.jpg)
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “பிரதான வழக்கின் விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்கக் கூடாது. ஜாமீன் நிபந்தனையில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது. இது தொடர்பாகச் செந்தில் பாலாஜி தரப்பு வாதிடுகையில், “வழக்கு முடிய 15 ஆண்டுகள் கூட ஆகலாம். எனவே எந்த பதவியும் வகிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையேற்றுக் கொண்ட நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)