இந்நிலையில் இவரின் காதலையறிந்த பெண் வீட்டார் ஏற்க மறுத்ததுடன் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்து விட்டார்கள். இரவு பெண்ணின் வீட்டு உறவினர் ஒருவர் தளவாய் சுந்தரம் அரிவாளைக் காட்டி மிரட்டியதாகச் சொல்லி, அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல உடன் இரண்டு போலீசாரையும் அழைத்து வந்திருக்கிறாராம். விசாரணை என்று அன்று இரவு தளவாய்சுந்தரத்தை அழைத்து வந்த அந்தப் போலீசார் இருவரும், அவரை டவுண் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வைத்துக் கடுமையாகத் தாக்கி திட்டியுமிருக்கிறார்கள். இதில் அவர்களோடு வந்த அந்த உறவினரும் சேர்ந்தே தாக்கியுள்ளாராம். தளவாயின் மேலாடையைக் கிழித்து அவமானப்படுத்தியுள்ளனர்.
நடு இரவில் வீடு திரும்பிய தளவாய்சுந்தரம் மன உளைச்சலால் அவமானம் தாங்காமல், அதிகாலை வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தற்கொலைக்கு முன்பு, நடந்தவைகளையும் தான் அவமானப்படுத்தப்பட்டது. பற்றியும் தனது சக உறுப்பினர்களுக்கு வாட்ஸ் அப்பில் பதிவிட்டுக் கதறியதுடன், தன்னைத் தாக்கிய போலீசார், அந்த உறவினர் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டும் தன்னை இக்கதிக்கு ஆளாக்கிய அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தரும்படி குறிப்பிட்டிருக்கிறார்.
தகவலறிந்த கடையநல்லூர் போலிசார் தளவாயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக டி.எஸ்.பி.ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்களான ஆடிவேல், மற்றும் கோவிந்தன் தலைமையிலான டீம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிற்சங்கவாதியின் தற்கொலைச் சம்பவம், வாட்ஸ் அப் காரணமாகவும் கடையநல்லூர் பகுதி பரபரப்பாகியிருக்கிறது.