Advertisment

"நாங்கள் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு முழுக் காரணமும் அந்த இன்ஸ்பெக்டரையே சேரும்.!" என தற்கொலைக் கடிதத்தை எழுதி முகவரியில்லாத மொட்டைக் கடிதாசியாய் வாட்ஸ் அப்பில் பரவவிட்டுள்ளனர் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் காவல்துறை துணைச்சரகத்தை சேர்ந்தது கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையம். இந்த ஸ்டேஷனின் ஆய்வாளராக இருப்பவர் சித்ரகலா என்பவர். இவரைக் குறித்துத் தான் அந்த கடிதம் பரவி வருகின்றது.

"காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றார் ஆய்வாளர் சித்ரகலா. பகல் முழுவதும் காவல் நிலையம் பக்கமே வராத அவர், கையிலுள்ள மொபைல் ஆப் மூலமாக கேமராவைக் கண்காணித்து விட்டு இரவானதும் ஸ்டேஷன் வருகின்றார். பகலில் பெறப்படும் மக்கள் புகாரினை வேறு யாராவது அதிகாரிகள் விசாரித்திருந்தால், "நான் எதற்கு இருக்கிறேன்? நான் வரும் வரை காத்திருக்க மாட்டார்களா..? என ஏக வசனத்தில் பேசுகிறார். அது போக, இவர் சாதி சார்ந்த ஆட்களுடன் அவர்களுடைய பாஷையிலேயே பேசி எங்களை கேலி செய்கின்றார். போதாக் குறைக்கு இரவு 10.30க்குத் தான் Roll Call நடத்துகிறார். இதே நிலை நீடித்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை வரும். அவ்வாறு ஏதும் நடந்தால் அதற்கு ஆய்வாளர் தான் பொறுப்பு." என்கிறது அந்தக் கடிதம்.

Advertisment

இக்கடிதம் மாவட்ட எஸ்.பி.அருண்சக்தி குமாருக்கும் செல்ல, நேரிடையாக ஓப்பன் மைக்கில் வந்தவர், "காவல்துறையில் பணியாற்றும் அனைவரையும் மதிக்க வேண்டும். அவர்களுக்கும் குடும்பம் இருக்கின்றது." என அறிவுரையும் வழங்கியுள்ளார். எனினும், இப்பிரச்சனை நீறுபூத்த நெருப்பாக உள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. இதனால் காவல்துறையில் மத்தியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.