இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி கோவை மாநகர காவல்துறையினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் முகமது உசேன், ஷாஜகான், சபியுல்லா ஆகிய மூன்றுபேரை பிடித்து இரண்டு தினங்களாக விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் தடை செய்யப்பட்ட இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும், அந்த அமைப்பின் வீடியோ காட்சிகளை பலருக்கு பகிர்ந்து கொள்வதாகவும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை தமிழில் மொழியாக்கம் செய்து பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்தி வரும் ஜிகாத் காட்சிகளின் வீடியோ காட்சிகளையும் பகிர்ந்து வருவதாகவும் தெரிகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். கோவை மாநகரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவான தங்கள் பலத்தை காட்டவும், பாடம் புகட்டவும் இவர்கள் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது எனவும், கோவில்கள், தேவாலயங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவையில் ஜிகாதி சித்தாந்தங்கள், கொள்கைகள், நம்பிக்கைகளுக்கு எதிரான நபர்களையும், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களை கவனித்து அறிக்கை கொடுத்து வரும் நுண்ணறிவு பிரிவுகளில் உள்ள காவல்துறையினரை கொன்று மக்கள் மனதில் பயத்தையும் பீதியையும் உருவாக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள் என தெரியவருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து செல்போன், பென்டிரைவ், லேப்டாப் போன்றவைகளும், இஸ்லாமிய மார்க்கம் குறித்த புத்தகங்களும், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களும், வங்கி பாஸ் புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.