/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a2831_1.jpg)
சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 6ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாகச் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், அதேபோல் அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடைபெற்றது. இதையடுத்து இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.
இது தமிழக அரசியலில் புயலை கிளப்பிய நிலையில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 20/03/2025 அன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், செந்தில்குமார் அடங்கிய அமர்வதற்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
'எதற்காக டாஸ்மாக் அலுவலகத்திற்கு வந்தீர்கள் என தெரிவித்திருக்க வேண்டும். இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு 'நள்ளிரவு சோதனை நடத்தப்படவில்லை. மாலை வரை சோதனை நடத்தப்பட்டது. சில நேரங்களில் சிறிது தாமதம் ஆகி இருந்திருக்கலாம். ஆனால் நள்ளிரவு வரை சோதனை நடத்தப்படவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்கள்' என அமலாக்கத்துறை தெரிவித்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a824_11.jpg)
இதனைக் கேட்ட நீதிபதிகள், ''பொய் சொல்ல வேண்டாம். அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகி இருக்கிறது'' என சுட்டிக்காட்டினர். அமலாக்கத்துறை அதிகாரத்தைச் செயல்படுத்திய விதத்தை தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம். இது சம்பந்தமாக அமலாக்கத்துறை மார்ச் 25 க்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை இதில் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இன்று (25/03/2025) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் வழக்கை விசாரித்துவந்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் வழக்கில் இருந்து விலகியுள்ளனர். இன்றுடாஸ்மாக் வழக்கு 48வது வழக்காக பட்டியலிடப்பட்டு இருந்தது. இன்று 12:30 மணிக்கு விசாரணைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், இன்று பத்து மணிக்குநீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் டாஸ்மாக் வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ஆனால் அதற்கான காரணங்கள் எதையும் குறிப்பிடவில்லை. வழக்கு ஆவணங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், தலைமை நீதிபதி இந்த வழக்கை யார் விசாரிப்பது என முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளனர். இன்று அல்லது நாளைக்குள் தலைமை நீதிபதி எந்த அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)