/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adsp-velladurai-art.jpg)
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி காலத்தின்போது ஐ.ஜி. விஜயகுமார், சந்தன கடத்தல் வீரப்பனை ஒடுக்கும் பணியில் அமர்த்தப்பட்டவர். அப்போது அவரது குழுவில் இருந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாட்டைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை. இவர், வீரப்பனைச் சுட்டுக் கொன்றதால் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் ஏ.டி.எஸ்.பி.யானவர். இவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் வழக்கில் கைதான ரவுடி, மற்றும் மதுரையில் எஸ்.ஐ.க்களைக் குத்திய ரவுடிகளை என்கவுண்டர் செய்ததில் ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ எனப் பெயர் பெற்றவர் ஆவார்.
அதே போல் 2003 ஆம் ஆண்டில் சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்துள்ளார். மேலும், புதுக்குளம் பாரதி, பிரபு ஆகியோர் வெள்ளத்துரையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்போது திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக ஏ.டி.எஸ்.பியாக வெள்ளத்துரை பணியாற்றி வந்தார். இதனையடுத்து இவர் திடீரென்று நேற்று (30.05.2024) பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவர் மீதான என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடியில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் இந்தப் பணியிடை நீக்க நடவடிக்கை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
சிபிசிஐடி பிரிவில் வெள்ளத்துரை மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உள்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை இன்று (31.05.2024) பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு அவரை பணியிடை நீக்கம் செய்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் வெள்ளத்துரை நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த சஸ்பெண்ட் உத்தரவை உள்துறை அமைச்சகம் தற்போது ரத்து செய்துள்ளது. இதற்கான உத்தரவை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏடிஎஸ்பி வெள்ளத்துரை மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை சர்ச்சையான நிலையில் உத்தரவை ரத்து செய்து உள்துறை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், “ஏடிஎஸ்பி வெள்ளத்துரை மீதான மனித உரிமை ஆணையத்தில் உள்ள வழக்குகள் தொடர்பாக ஓய்வூதிய பலன்களில் ரூ.5 லட்சம் பிடித்தம் செய்து, பணி ஓய்வு பெற அனுமதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)