Skip to main content

திடீரென ஏற்பட்ட ஏற்றுமதி ரக மாற்றம்... விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த முடிவு..!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

ஏற்றுமதி ரகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக உள்நாட்டில் சரித்திரம் காணாத அளவில் நூல் விலை ஏற்றப்பட்டதால், தென்காசி மாவட்டத்தின் தொழில் நகரமான சங்கரன்கோவிலில் சிறு, குறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்து, கடந்த 16ஆம் தேதியிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அடித்தட்டு நெசவுத் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

சங்கரன்கோவில் மற்றும் அதன் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 5,000 விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. காலம் காலமாக இயங்கிவரும் விசைத்தறிகளை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பிணைந்துள்ளது.

 

இங்குள்ள விசைத்தறிகளில் தயார் செய்யப்படும் ஏற்றுமதி தரம் கொண்ட ‘நைஸ் ரக’ காட்டன் சேலைகள், பல்வேறு டிசைன்களில் தயார் செய்யப்படுகின்றன. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, பீகார், மே.வங்கம் என வெளி மாநிலங்களே இதன் விற்பனைச் சந்தையாகும். குறிப்பாக அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே பெரும்பாலும் இந்த ரக ஜவுளிகளின் வாடிக்கையாளர்கள்.

 

கரோனா காலத்திற்கு முன்புவரை இதன் மூலப் பொருளான நூலின் விலை கட்டுக்குள் இருந்து வந்திருக்கிறது. ஆட்கொல்லி வைரசான கரோனா தாக்கம் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஒன்பது மாத கால ஊரடங்கால் விசைத்தறிகள்  முடக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான நெசவுத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வேலையின்மை காரணமாக வறுமையின் பிடிக்குள்ளானது; அவர்களின் வாழ்வாதாரம் உருக்குலைந்தது. கரோனா கட்டுப்பாட்டிற்குப் பின்னர் ஊரடங்கு தளர்வு காரணமாக தொழில்கள் மெல்ல மெல்ல செயல்படத் தொடங்கிய பிறகும், ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவுத் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரங்களில் அத்தனை ஆரோக்கியமில்லை.

 

இந்தச் சூழலில், அடுத்த பேரிடியாக நூல் லிலையேற்றம் தொழிலையே ஸ்தம்பிக்கச் செய்கிற அளவுக்குப் போயிருக்கிறது.

 

‘ஒரு வகையில் இந்த திடீர் விலையேற்றம் சரித்திரம் காணாத அளவு என்று கூடச் சொல்லலாம்’ என்கிற ஜவுளி உற்பத்தியாளர்களின் சங்கம் மற்றும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரான சுப்பிரமணியன், “எங்களின் தயாரிப்புகள் அடித்தட்டு மக்களுக்கானது. அவர்களின் வருமான வரம்புதான் விற்பனையின் அச்சாணி. இத்தனை காலம் வரை நூல் விலையில் ஏற்றமிருந்தாலும் ஓரளவு சீராகவே சூழல்களிருந்தன. 

 

ஆனால், கரோனா காலத்திற்குப் பிறகு மூலப் பொருளான ஒருகட்டு சிட்டா நூலின் விலை ரூ.395 ஏற்றப்பட்டுள்ளது. இதனால், ரூ.1,485 என இருந்த ஒரு கட்டு சிட்டா நூலின் விலை தற்போது ரூ.1,880 என்றாகிவிட்டது. நாங்களே இந்த ஏற்றத்தை எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் மில்களுக்குரிய மூலப் பொருளான பஞ்சு விலையில் மாற்றமில்லை. ஆனால், திடீரென்று நூல் விலை ஏற்றப்பட்டிருக்கிறது. கரோனா முடக்கம், விற்பனை மற்றும் தொழில் என்று பல தரப்பிலும் பாதிப்பு. மேலும் இந்த விலையேற்றம் எங்களால் தாங்க முடியாத அடியாக எண்ணுகிறோம். ஏனெனில் நூல் விலையேற்ற அளவுக்குப் புடவைகளின் விலையை திடீரென்று ஏற்ற முடியாத நிலை. காரணம் மக்களின் வாங்கும் சக்தியோ சரிவில் உள்ளது.

 

எங்களுக்கு நூல் சப்ளை செய்கிற மில்களின் சிட்டா நூல் விலை, கோன் விலையைவிட வழக்கம் போல் சற்று அதிகமாகதானிருக்கும். தற்போது வெளிநாட்டில் கோன் உற்பத்திக்கு நல்ல விலை கிடைப்பதால், அனைத்து மில்களும் சிட்டா நூல் தவிர்த்து, லாபம் தருகிற கோன் உற்பத்திக்கு மாறியதால் அவைகளின் ஏற்றுமதி அதிகரித்துவிட்டது. எங்களுக்கான சிட்டா நூல் உற்பத்தியில் முடக்கம். அதனால்தான் உள்நாட்டில் எங்களின் உற்பத்திக்கு அத்யாவசியமான சிட்டா நூல் விலை இந்த அளவுக்கு உச்சத்திற்குப் போய்விட்டது. எனவே இதனை மட்டுப்படுத்தவும் விலையேற்ற விஷயத்தில் அரசு தலையிட்டு ஏழை மக்கள் நம்பியிருக்கும் இந்தத் தொழிலின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டி முறையாக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

 

விலையேற்றம் காரணமாக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் ஊசலாட்டத்தில் இருக்கின்றன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவலர்கள் தாக்குதலால் டிரைவர் மரணம்? மக்களின் போராட்டத்தால் தென்காசியில் பதற்றம்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi
வேன் டிரைவர் முருகன்

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்குபுதூரைச் சேர்ந்த வேன்டிரைவர் முருகன் கடந்த மார்ச் 8 அன்று (மஹாசிவராத்திரி) அச்சம்பட்டியிலிருந்து பொது மக்களை வேனில் ஏற்றிக் கொண்டு பஞ்சஸ்தலங்கள் செல்வதற்காக சங்கரன்கோவில் டவுண் பஜார் வழியாக வந்திருக்கிறார். அதுசமயம் எதிர்பாராத விதமாக வேன் முன்னே சென்ற ஆட்டோ ஒன்றில் மோதியதால், வேன்டிரைவர் முருகனும் ஆட்டோ ஓட்டுனரும் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் மெயின் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நகர முடியாமல் நீண்ட தொலைவிற்கு ப்ளாக் ஆகியது போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் சம்பவ இடம் வந்தவர்கள் முருகனை தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மயக்கமடைந்த முருகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையறிந்த முருகனின் உறவினர்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இரவு முழுக்க சாலை மறியலில் ஈடுபட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

போலீசார் தாக்கியதால்தான் முருகன் இறந்ததாகக் கூறி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்திவருகின்றனர். சம்பவத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அது வரை உடலை வாங்கப் போவதில்லை என்று கூறி அவரது உறவினர்கள் வடக்குபுதூர் கிராமத்தில் 6வது நாளாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உடன் மார்க்சிஸ்ட் கட்சியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டதன்படி மார்ச் 13 அன்று சங்கரன்கோவில் நகரின் தேரடித் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்துகிற வகையில் காலை 10.30 மணியளவில் நகரைச் சுற்றியுள்ள வடக்குபுதூர், காந்திநகர், அச்சம்பட்டி, புளியம்பட்டி நெடுங்குளம், அழகாபுரி, சீவலராயநேந்தல், அழகுநாச்சியார்புரம், அழகநேரி என 32 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பங்கேற்றனர். அதுசமயம் ஒரு பகுதியினர் நகரின் முக்கியத் தடுப்புகள், தடைகளைப் போட்டு வாகனங்களைத் தடுத்தும் மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் காரணமாக பாதுகாப்பு பணிக்கென்று போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் நகரம் இறுக்கமானது. இதனிடையே சங்கரன்கோவில் அருகேயுள்ள மருதப்பபுரம் கிராமத்தில் எதிர்பாராத வகையில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்ததால் அதனை அணைக்கிற வகையில் அந்த வழியாக வந்த சங்கரன்கோவிலின் தீயணைப்பு நிலைய வாகனத்தை நகருக்குள் விடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்க தீயணைப்பு வாகனம் வேறு வழியாகச் சென்றது.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

நேரம் செல்லச் செல்ல வேறு சில பகுதிகளிலிருந்தெல்லாம் மக்கள் பிரதானச் சாலையை நோக்கி திரண்டு வர அது சமயம் அந்தப் பகுதியிலிருந்த கடைகளை அடைக்கச் சொல்லி கற்களை வீசவே, பதற்றமடைந்த வியாபாரிகள் பீதியில் கடைகளை அடைத்தனர்.  ஆபத்தான நிலையை அறிந்த தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமார் மறியல் நடந்த பழைய பேருந்து நிலைய பகுதிக்கு வந்தவர் அவர்களை சமாதானப் படுத்தியிருக்கிறார். ஆனாலும் ஒரு பகுதியினர் அவரைச் சூழ்ந்து கொண்டவர்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்து செல்ல விடாமல் முற்றுகையிட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

தொடர்ந்து அவர்களிடம் பேசிய எஸ்.பி, முருகன் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதாக கூறியவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மறியல், ஆர்ப்பாட்டம் என நகரம் துண்டிக்கப்பட, சுற்றுப்பட்டுக் கிராமங்களிலோ, பதற்றமும் பரபரப்பும் இறங்கியபாடில்லை.

Next Story

தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி; அதிகாலையில் நிகழ்ந்த விபத்து

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Overturned truck on tracks; An early morning accident

கேரளாவில் இருந்து பிளைவுட் ஏற்றி வந்த லாரி தமிழக எல்லையான கோட்டைவாசல்  பகுதியில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் கேரளாவில் இருந்து பிளைவுட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புளியரை சோதனை சாவடியை தாண்டி தென்காசி மாவட்டத்தின் கோட்டைவாசல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது மலை பாதையில் சென்று கொண்டிருந்த லாரியானது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

லாரி செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்த சிறிது நேரத்தில் கேரளாவின் ஆற்றுக்கரை பகவதி அம்மன் கோவில் நிகழ்ச்சிக்காக பயணிகள் இல்லாத சிறப்பு ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. விபத்தை அறிந்தவர்கள் இரவு நேரத்தில் டார்ச் லைட் காட்டி ரயிலை நிறுத்தியுள்ளார்கள்.

அந்தப் பகுதியில் அதிகாலையில் அதிகமான ரயில் போக்குவரத்துகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் ரயிலானது செங்கோட்டையிலிருந்து 4 மணிக்கு புறப்படும். அந்த ரயில் இந்த விபத்து காரணமாக அங்கேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்பொழுது ரயில் போக்குவரத்து அந்த பகுதியில் சீரானது. இருப்பினும் மூன்று மணி நேரம் தாமதமாக எழும்பூர்-கொல்லம் ரயில் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.