Skip to main content

விமான நிலைய இயக்குநர் எடுத்த திடீர் நடவடிக்கை! பரபரப்பான அதிகாரிகள்! 

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

Sudden action taken by the Airport Director! Exciting officers!

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய், ஷார்ஜா சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் தற்போது இயக்கப்படுகின்றன. இந்த திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி மற்றும் தங்கம் மாற்றும் இடைத்தரகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார்களை முன்வைத்துவந்தனர்.

 

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் வெளிநாட்டு கரன்சிகளுடன் வருவதால் இந்திய பணம் கையில் இல்லாததை அறிந்துகொண்டு இடைத்தரகர்கள் அவர்களிடம் கமிஷன் அடிப்படையில் டாலர்களை மாற்றித் தருவார்கள். அதேபோல் சிங்கப்பூர், மலேசியா, ஷார்ஜா, துபாய் விமானங்களில் வரும் பயணிகளிடம் அங்கிருக்கும் புரோக்கர்கள் தங்க நகைகளைக் கொடுத்து அனுப்புவார்கள். 

 

தங்களது நகை எனக் கூறி எடுத்துவரும் பயணிகள், திருச்சி விமான நிலைய வாசலில் இருக்கும் இடைத்தரகர்களிடம் கொடுத்து கமிஷன் வாங்கிக்கொள்வார்கள். இவ்வாறு சுமார் 30 இடைத்தரகர்கள் திருச்சி விமான நிலையத்தில் சுற்றிவருவது வழக்கமாக இருந்துவருகிறது. இவர்களுக்கு அங்கிருக்கும் சில டிரைவர்களும் உடந்தை எனக் கூறப்படுகிறது.

 

இவ்வாறு திருச்சி விமான நிலையத்தில் புரோக்கர்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக விமான நிலைய இயக்குநர் தர்மராஜ் திருச்சி ஏர்போர்ட் போலீசில் கூறியிருந்தார். ஆனால், அந்தப் புகார் குறித்து பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. இந்த நிலையில், இன்று (16.11.2021) காலை சுமார் 9 மணியளவில் விமான நிலையம் வந்த விமான நிலைய இயக்குநர் தர்மராஜ், காரில் இருந்து இறங்கி நேரடியாக இடைத்தரகர்களைப் பிடிக்க ஆரம்பித்தார். 

 

இதனை சற்றும் எதிர்பாராத இடைத்தரகர்கள் ஓட்டம் பிடித்தனர். விடாமல் விரட்டிய விமான நிலைய இயக்குநர் தர்மாஜ், 2 புரோக்கர்களைப் பிடித்து ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தார். விமான நிலையத்தில் இருந்த இடைத்தரகர்களை விமான நிலைய இயக்குநரே விரட்டிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.