Skip to main content

எப்பேர்ப்பட்ட பள்ளியில் இப்படி ஒரு மோசடி!  -பிடியரிசி தியாகத்தை நினைவுகூரும் விருதுநகர்!

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

“இதெல்லாம் காலக்கொடுமைங்க..” என்று விருதுநகர் பள்ளி ஒன்றில் நடந்த மோசடி விவகாரத்தை வேதனையோடு சொன்னார் அந்த சமுதாய அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒருவர்.  “இப்பல்லாம் ஸ்கூல் நிர்வாகத்துக்கு அடிச்சிப் பிடிச்சி வர்றதே எவ்வளவு சம்பாதிக்கலாம்கிற கணக்கோடுதான். ஆனா.. விருதுநகர் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட ஷத்திரிய வித்யாசாலா பள்ளியிலும் மோசடி நடந்திருப்பதைத்தான் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஏனென்றால், இந்தியாவில் எந்த ஒரு பள்ளிக்கும் இல்லாத வரலாற்றுப் பின்னணி ஷத்ரிய வித்தியாசாலா பள்ளிகளுக்கு உண்டு.” என்றார் குமுறலுடன்.  

 

 Such a scam at any kind of school


என்ன மோசடி? செய்தது யார்?

விருதுநகர் ஷத்ரிய வித்யாசாலா மெட்ரிகுலேசன் ஹையர் செகன்டரி ஸ்கூல் மேனேஜிங் டிரஸ்ட்டில் நிர்வாகக்குழு உறுப்பினராக இருக்கிறார் ஆனந்தவேல். இவருடைய மேற்பார்வையில்தான் அந்தப் பள்ளி இயங்கி வருகிறது. இவர் சூலக்கரை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் ‘இப்பள்ளியில் ஆய்வு நடத்தியபோது, பள்ளியின் செயலாளர் அருண்ராஜும், பொருளாளர் கோபாலும், பள்ளிகளின் நிர்வாகத்தில் தங்களின் சுயநலம் கருதி, மோசடி செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நம்பிக்கை மோசடி செய்து, பொய்யான ரசீதுகளை உற்பத்தி செய்து அதனை ஆவணப்படுத்தி, நிர்வாகத்திற்கு ரூ.74,94,293 பண இழப்பினை ஏற்படுத்தியிருக்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 Such a scam at any kind of school in viruthunagar

 

ஹனி டிவி என்பது விருதுநகரில் இயங்கிவரும் லோக்கல் சேனலாகும். கே.வி.எஸ். மெட்ரிகுலேசன் பள்ளியின் விளம்பரங்களை ஒளிபரப்பியதாக அந்தச் சேனல் மூலம் போலி பில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மற்ற லோக்கல் சேனல்களிடமும் காவல்துறை விசாரணை நடத்தியபோது,  ‘அப்படி எந்த விளம்பரமும் செய்ததில்லை. அந்தப் பள்ளியின் பெயரில் பில் போட்டதும் இல்லை.’ என்று தெளிவுபடுத்தியுள்ளனர். பேருந்துகளின் பின்புறமும், கேபிள் டிவி மூலமும் விளம்பரம் செய்த செலவு என, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கணக்கு காண்பித்திருக்கின்றனர். அந்தக் கணக்கில்தான் போலி பில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருவரும் சேர்ந்து,  ஒரே ஆண்டில் ரூ.95 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.  

 

 Such a scam at any kind of school in viruthunagar

 

“லஞ்சமும் ஊழல் மலிந்திருக்கும் இந்தக் காலத்தில் இதுபோன்ற மோசடிகளெல்லாம் சகஜமப்பா என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், ஷத்ரிய வித்யாசாலா பள்ளிகள்  உருவான பின்னணியின் எங்கள் முன்னோர்களின் தியாகம் கொட்டிக்கிடக்கிறது.” என்று கண்கள் கசிந்திட விவரித்தார் அந்த உறுப்பினர்.

இதோ அந்த வரலாறு -

கி.பி.1702-1703 காலக்கட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அதனால், அங்கு வசித்த நாடார் சமுதாயத்தினர் மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி என பல ஊர்களுக்கும் குடிபெயர்ந்தனர். வியாபாரம் என்பதை உயிர் மூச்சாகக் கருதும் அச்சமுதாயத்தினர், வியாபாரத்துக்கு கல்வியானது மிகமிக அவசியம் என்பதை உணர்ந்து ஒரு முடிவெடுத்தனர். பிடி அரிசித் திட்டம் உருவானது. அச்சமுதாயப் பெண்கள் சமையலுக்காக வீட்டிலுள்ள அரிசியை எடுக்கும்போது, ஒரு பிடி அரிசியைத் தனியாக ஒரு கலயத்தில் இடவேண்டும். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் கலயத்தில் சேர்த்த அரிசியானது,  மொத்தமாகச் சேகரிக்கப்படும்.  அதை விற்று கிடைத்த பணத்தில் விருதுநகரில் பள்ளி ஒன்றை நடத்தினர். அந்தப் பள்ளிதான் ஷத்ரிய வித்யாசாலா பள்ளி.  இதுபோக, கோவில் நிதி, பல்வேறு தரப்பிலிருந்தும் வசூலாகும் மகமை நிதி, சமுதாய மக்களின் நன்கொடை என முடிந்த மட்டிலும் பணம் சேர்த்து,  தங்களுக்குத் தேவையான கல்வியை எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்தனர்.

 

 Such a scam at any kind of school in viruthunagar

 

‘அக இருள் அகற்றி அறிவு ஒளி வீசுக! புண்ணியம் கோடி ஓர் ஏழைக்கு அறிவித்தல்..’ என்ற வரிகளுடன் ஆலமரத்தடியில் பிடி அரிசி சேகரிக்கும் கலயமும்,  தாமரை மலர்ந்த குளத்தின் பின்னணியில் சூரியன் உதிப்பதும்தான் பிடி அரிசிப் பள்ளியின் லோகோவாக இருக்கிறது. விருதுநகரில் உள்ள அந்தப் பிடி அரிசிப் பள்ளியில்தான், பின்னாளில் தமிழகத்தின் முதலமைச்சராகி  கல்விப் புரட்சி ஏற்படுத்திய கர்மவீரர் காமராஜர் படித்தார்.

முன்னோர்களின் திட்டமிடலும், தியாகமும் ஒன்றிணைந்து உருவான பள்ளிகளின் நிர்வாகத்தில் இப்படி ஒரு மோசடி நடந்திருக்கிறதே என்பதுதான் விருதுநகரின் பொதுவான ஆதங்கமாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகா; பிரச்சாரத்தில் ருசிகரம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Radhika asked for vote and Delicious in the campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது கட்சியை பா.ஜ.கவில் இணைத்திருந்தார். இதையடுத்து, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவதற்காக நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த வகையில், ராதிகா விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் கப்பலூர் பகுதியில், அ.ம.மு.க, பா.ம.க, த.மா.க கட்சி நிர்வாகிகளுடன் ராதிகாவும், சரத்குமாரும் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராதிகா, “என்னை நீங்கள் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு சிறப்பான கூட்டணி. இந்த கூட்டணி எது சொன்னாலும் செய்யும் கூட்டணி. ஆனால், எதிர் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கூட தெரியவில்லை. உங்கள் சகோதரியாக, அக்காவாக, சித்தியாக இருந்து மக்கள் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் போராடுவேன். எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் விருதுநகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்” என்று கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார்.

அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் கிழக்கு சீமையிலே படத்தில் விருமாயி கதாபாத்திரம் போல் நடித்து காட்டுமாறு கோரிக்கை வைத்தனர். இதனைக் கேட்ட ராதிகா, “அதை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா?” எனக்கூறிய அவர், கிழக்கு சீமையிலே படத்தில் பேசிய வசனத்தை சொல்லி சினிமாவில் வருவது போல் மடியேந்தி மக்களிடம் வாக்கு கேட்டார். அதனை அங்கிருந்த மக்கள், ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.