எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அ.தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. எனவே, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனுக்களையும், இடைக்கால நிவாரணமாக தடை விதிக்கக்கோரிய கூடுதல் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், பொதுக்குழு கூட்டத்திற்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
அ.தி.மு.க. தொடர்பான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக தீர்ப்புகள் வந்துள்ளதால், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது.